Wednesday 28 August 2019

திருவள்ளுவர் நாணயம்

தெய்வப்புலவர் திருவள்ளுவரின்திருவு­­ருவம் பொறித்த ஒரு தங்க நாணயம் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினி சார்ந்த எல்லிஸ்துரை என்பவரால் சென்னையில் வெளியிடப்பட்டது என்பது ஒரு வியப்பான செய்தி..
ப்யாரீ ப்ரியனின் இலக்கிய வரலாற்று மீள்பகிர்வு...
கல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தங்க நாணயங்களின் பட்டியலின் முதல் தொகுதியில் இந்தத் தங்க நாணயத்தைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு முதன்முதலாகக் காணப்படுகிறது. இரட்டை வராகன் என்று அழைக்கப்பட்ட ஒரு தங்க நாணயத்தின் முன்புறத்தில் அமர்ந்த நிலையில் திருவள்ளுவரும், பின்புறத்தில் ஐந்துமுனை நட்சத்திரமும் பொறிக்கப்பட்டுள்ளன என்று இக்குறிப்பு தெரிவிக்கிறது. இக்காசு ஆங்கிலேய கிழக்கிந்தியக் கும்பினியின் சென்னை அரசால் 1819-க்கு முன்னர் வெளியிடப்பட்டது என்றும், இது புத்தம் புதியதாகக் காணப்படுவதால் அச்சிடப்பட்டும் புழக்கத்திற்கு வெளியிடப்படாத நாணயமாக இருக்க வேண்டும் என்றும், இதே போன்று நான்கு நாணயங்கள் மட்டுமே கிடைத்துள்ளன என்றும், அவற்றில் இரண்டு லண்டனில் பிரிட்டிஷ் மியூசியத்திலும், மற்ற இரண்டு கல்கத்தாவில் இந்திய அருங்காட்சியகத்திலும­­் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன என்றும் இக்குறிப்பிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.
ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினி அரசு சென்னையிலிருந்து 19-ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் வெளியிட்ட "நட்சத்திரப் பகோடா" அல்லது 'வராகன்' என்று அழைக்கப்பட்ட பல தங்க நாணயங்களில் இதுவும் ஒன்று என்று தெரிகிறது. மேலும் இக் காசு இயந்திரத்தின் மூலம் மிகவும் நேர்த்தியாக அச்சடிக்கப்பட்டுள்ளத­­ு. கும்பினி அரசு சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதன் முதலாக 1807-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இயந்திர நாணய சாலையை நிறுவி தங்கம், வெள்ளி மற்றும் செப்புக் காசுகளை வெளியிடத் தொடங்கியது. 1817-ம் ஆண்டும் டிசம்பர் மாத இறுதியில் தங்க வராகன்கள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டு விட்டது. ஆகையால் இக்காசு 1807-ம் ஆண்டு முதல் 1817-ம் ஆண்டு வரையிலான பத்தாண்டு காலத்துக்குள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்று நிச்சயமாகச் சொல்ல முடியும். மேலும், 1616-ம் ஆண்டும் ஆங்கிலேய கிழக்கிந்திய கும்பினியார் கல்கத்தாவில் வணிக மையம் நிறுவி, 200 ஆண்டுகள் ஆனதை கொண்டாட 1816-ம் ஆண்டு சில சிறப்பு நாணயங்களை வெளியிட்டார்கள். அவற்றுள் இது ஒன்றாக இருக்கலாம்.
எல்லிஸ் துரையும் திருக்குறளும்
அக்கால கட்டத்தில் ஃப்ரான்சிஸ் வைட் எல்லிஸ் என்னும் ஆங்கிலேய அதிகாரி சென்னை மாவட்டக் கலெக்டராகப் பணியாற்றி வந்தார். 1796-ம் ஆண்டு ஆட்சிப் பணியில் சேர்ந்த அவர் சில ஆண்டுகளிலேயே தமிழ் முதலிய தென்னிந்திய மொழிகளிலும் வடமொழியிலும் பெரும் புலமை பெற்றுவிட்டார். தமிழ் நூல்கள் அச்சேறிராத அக்காலத்திலேயே அவர் ஏட்டுச் சுவடிகளிலிருந்து முறையாகத் தமிழைக் கற்றுத் தேர்ந்தார். தமிழ் முதலிய திராவிட மொழிகள், சம்ஸ்கிருதம் போன்ற இந்தோ-ஆரிய மொழிகளிலிருந்து வேறுபட்டவை என்ற உண்மையை முதன்முதலாக உலகுக்கு அறிவித்த பெருமை இவரையே சாரும்.
எல்லிஸ் துரைக்கு திருவள்ளுவர் மீதும் திருக்குறள் மீதும் அளப்பரிய பற்று இருந்தது. திருக்குறளிலிருந்து பல குறள்களை தேந்தெடுத்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தெளிவான உரையுடன் ஓர் அரிய நூலை இவர் எழுதினார். இதுவே திருக்குறளின் முதல் ஆங்கில மொழி பெயர்ப்பாகும்.
#ப்யாரீப்ரியன்..

No comments:

Post a Comment