Sunday 28 June 2020

மாமல்லபுரம் ஆய்வு

#மகாபலிபுரம்.....ஆய்வு...

மாமல்லபுரத்து ஏழு கோவில்கள் (Seven Pagodas of Mahabalipuram) என்பது தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள மாமல்லபுரத்தில் தற்போது கடற்கரையில் எஞ்சியுள்ள கலையழகுமிக்க கோவில் பகுதிகள் தவிர கடல்கோள் ஏற்பட்டு மூழ்கிப்போன வேறு கோவில் தொகுதிகளும் உண்டு என்பதைக் குறிக்கும் சொற்பயன்பாடு ஆகும்.

மாமல்லபுரத்தில் மறைந்துபோன கோவில்கள் பற்றிய மரபுச் செய்தி

இன்று மாமல்லபுரத்தில் அமைந்துள்ள கடலோரக் கோவில் தவிர வேறு ஆறு கோவில்கள் கடல்நீருக்குள் மூழ்கிப்போயின என்னும் மரபுச் செய்தி தமிழகத்தில் பல காலமாக வழங்கிவருகிறது. அச்செய்தியையும் உள்ளடக்கிய விதத்தில் 1914இல் ஜே.டபிள்யூ ஜோசையா வாட்டர்சு (J.W. Josaiah Water) என்ற பிரித்தானியர் “ஏழு கோவில்கள்” (The Seven Pagodas) என்ற தலைப்பில் இலண்டனில் ஒரு நூல் வெளியிட்டார்.

1931இல் டி.ஆர். ஃபைசன் (D.R. Fyson) என்பவர் “மகாபலிபுரம் அல்லது ஏழு கோவில்கள்” (Mahabalipuram or Seven Pagodas) என்ற தலைப்பில் சிறியதொரு நூலை வெளியிட்டார். ஃபைசன் நெடுங்காலம் சென்னையில் வாழ்ந்த ஒரு பிரித்தானியர். அவர் எழுதிய சிறுநூல் ஐரோப்பிய பயணியருக்கு மாமல்லபுரம் பற்றிய செய்திகள் வழங்குகின்ற ஒரு பயணக் கையேடு. தாம் எழுதிய சிறு நூலின் கடைசிப் பக்கங்களில் அவர் தமிழ்நாட்டில் மாமல்லபுரக் கோவில்கள் பற்றி வழங்கிவந்த புராதனச் செய்தியையும் குறிக்கிறார். அதாவது, சீரும் சிறப்புமாகப் பல கோவில்களைக் கொண்டு விளங்கிய மாமல்லபுரத்தைப் பார்த்து இந்திரன் பொறாமை கொண்டு, பெரியதொரு புயலை அனுப்பி அந்நகரை அழித்துவிட்டாராம். கடற்கரைக் கோவில் மட்டும் தப்பியது. கடலில் மீன்பிடிக்கச் சென்றவர்கள் கடலலைகளின் கீழே கோவில்கள் “ஒளிர்ந்து மிளிர்வது” பற்றிக் கூறுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார். இவ்வாறு மூழ்கிப்போன ஆறு கோவில்கள் உண்மையிலேயே உள்ளனவா என்பது குறித்து ஃபைசன் ஆய்வு நிகழ்த்தவில்லை. மாறாக, ஏழு கோவில்கள் பற்றிய மரபினால் மாமல்லபுரம் புகழ்பெற்றதே அவருக்கு முக்கியமானதாயிற்று.

இருப்பினும், இன்றைய மாமல்லபுரத்தை அடுத்த கடல்பகுதியில் வேறு கோவில்களும் கட்டடங்களும் கடலுக்குள் மூழ்கிய நிலையில் உள்ளனவா என்பது பற்றிய அறியும் ஆர்வம் மக்கள் நடுவிலும், அகழ்வாளர் நடுவிலும் தொடர்ந்து இருந்துவந்துள்ளது.

ஆய்வாளர் முயற்சிகள்

இந்திய வரலாற்று அறிஞர் என்.எஸ். இராமசுவாமி (N. S. Ramaswami) 1993இல் வெளியிட்ட “தென்னிந்தியக் கோவில்கள்” (Temples of South India) என்ற நூலில் 13ஆம் நூற்றாண்டு பயணி மார்க்கோ போலோ மாமல்லபுரம் சென்ற செய்தியைக் குறிப்பிடுகிறார். மார்க்கோ போலோ மாமல்லபுரத்தை நிலப்படத்தில் காட்டினார்.

ஐரோப்பியர் பலர் பிரித்தானிய இந்தியாவுக்குச் சென்று திரும்பியதோடு “ஏழு கோவில்கள்” பற்றியும் பேசினர். 18-19 நூற்றாண்டுகளில் சென்னையில் வாழ்ந்த பிரித்தானிய வானியல் ஆய்வாளர் ஜான் கோல்டிங்காம் (John Goldingham) என்பவர் 1798இல் மாமல்லபுரம் சென்றது பற்றியும் கடல்கோளால் மறைந்த மாமல்லபுரக் கோவில்கள் பற்றிய மரபுச் செய்தி குறித்தும் உரைக்கிறார். அவர் கூறியவற்றை மாற்கு வில்லியம் கார் (Mark William Carr) என்பவர் தொகுத்து தாம் வெளியிட்ட நூலில் அளித்தார். அந்த நூலின் பெயர் “சோழமண்டலக் கரையில் அமைந்த ஏழு கோவில்கள் பற்றிய விளக்க மற்றும் வரலாற்று ஆய்வுகள்” (Descriptive and Historical Papers Relating to the Seven Pagodas on the Coromandel Coast) என்பது. அது 1869இல் வெளியானது.

கோல்டிங்காம் பெரும்பாலும் மாமல்லபுரத்துக் கலைப்பொருள்கள், சிலைகள், கல்வெட்டுகள் பற்றிப் பேசினார். கல்வெட்டுகள் பலவற்றையும் அவரே தம் கைப்பட பிரதி எடுத்து வெளீட்டார். அவருடைய விளக்கப்படி, அக்கல்வெட்டு படவடிவ எழுத்துக்குறிகளைக் கொண்டவை, அவற்றின் வடிவம் பார்த்து அவை எப்பொருள் தருகின்றன என்று காண வேண்டும். மேற்கூறிய நூலில் பெஞ்மின் கி பாபிங்டன் என்பவர் தாம் எழுதிய கட்டுரையில் மாமல்லபுரக் கல்வெட்டுகளில் தெலுங்கு எழுத்துக்கள் உள்ளன என்றார்.

பிரித்தான எழுத்தாளர் ஜே.டபிள்யூ. கோம்ப்ஸ் (J.W. Coombes) என்பவர் மாமல்லபுரத்தின் மறைந்த கோவில்கள் பற்றிய மரபுச் செய்தியையும் ஐரோப்பிய கருத்தையும் 1914இல் எடுத்துரைத்தார். மாமல்லபுரத்துக் கடற்கரையில் ஒருகாலத்தில் பலகோவில்கள் இருந்தன என்றும், அக்கோவில்களின் கூரையில் வேய்ந்த தாமிரத் தகடுகள் கதிரவனின் ஒளியில் ஒளிர்ந்து கடல் பயணிகளுக்குக் கலங்கரை விளக்கமாக அமைந்தன என்றும், மக்கள் பொதுவாக ஏழுகோவில்கள் இருந்ததாகக் கருதுவதாகவும் குறிப்பிட்டார்.

என்.எஸ். இராமசுவாமி கருத்துப்படி, மாமல்லபுரத்தின் மறைந்த கோவில்கள் பற்றிய கருத்து எழுவதற்கு முக்கிய காரணம் 1810இல் ராபர்ட் சவுதி (Robert Southey) என்பவர் வெளியிட்ட “கேகமாவின் சாபம்” (The Curse of Kehama) என்னும் காப்பியமே. அக்கவிஞர் தமது படைப்பில் மாமல்லபுரத்துக் கடலின் கீழே கோவில்கள் உள்ளன என்றார்.

ஆய்வாளர் இராமசுவாமி கருத்து

என்.எஸ். இராமசுவாமி மாமல்லபுரத்தில் கடல்கொண்ட கோவில்கள் உண்டு என்னும் செய்திக்கு வரலாற்று ஆதாரம் இருந்ததாகக் கருதவில்லை. இருப்பினும், பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் மாமல்லபுரத்தின் பல வரலாற்றுக் கட்டடங்கள் மணலுக்குள் அழுந்திக் கிடந்தன என்றும், பிரித்தானியக் குடியேற்றத்தாரும் அவருடைய குடும்பத்தாரும் தம் ஓய்வு நேரத்தில் உழைத்து அந்த வரலாற்றிடங்களை வெளிக்கொணர்ந்தார்கள் என்றும் குறிப்பிடுகிறார். மாமல்லபுரத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை உணர்ந்ததும் பிரித்தானியர் கோலின் மாக்கென்சி (Colin Mackenzie) போன்ற அறிஞரின் துணையோடு அகழ்வாய்வில் ஈடுபட்டனர்.

மறைந்துபோன வரலாற்று ஆதாரம்

2004, திசம்பர் 26இல் ஏற்பட்ட சுனாமிக்கு முன்னால் மாமல்லபுரத்து மறைந்த கோவில்கள் பற்றிய செய்தி, ஆதாரங்களோடு உறுதியாக நிறுவப்படவில்லை. கடற்கரைக் கோவில், இரத வடிவிலான குடைக்கோவில்கள் மற்றும் கட்டுக்கோவில்கள் ஆகியவை ஒரே இடத்தில் காணப்பட்டது அந்த இடத்தின் சமய முக்கியத்துவத்தை வெளிப்படுத்தின. எனவே, மேலதிக கோவில்கள் அங்கு இருந்திருக்கலாம் என்ற ஊகம் உறுதியாகவே இருந்தது.

மாமல்லபுரத்தின் மறைந்த கோவில்கள் பற்றிய மர்மம் தோன்றியதற்கு என்.எஸ். இராமசுவாமி அளித்த விளக்கம்: ”2000 ஆண்டு தொன்மை வாய்ந்த கலாச்சார அறிகுறிகள், மாமல்லபுரத்தில் தற்போதுள்ள சுமார் 40 கட்டடங்கள், வெளியே அமைந்துள்ள சிற்பத்தொகுதிகள் இவை எல்லாவற்றையும் அடிப்படையாகக் கொண்டு மக்கள் மனத்தில் மாமல்லபுரத்தின் மறைந்த கோவில்கள் பற்றிய கருத்து எழுந்தது. அதற்கு ஐரோப்பியர்கள் ஊக்கமளித்தார்கள். ஆனால் உண்மையிலேயே மாமல்லபுரத்து மறைந்த கோவில்களுக்கு வரலாற்று ஆதாரம் இல்லை.”

ஆனால், வாய்மொழிச் செய்தியும் சில வேளைகளில் உண்மையாகலாம் என்பது விரைவில் தெரிந்தது.

2002ஆம் ஆண்டு ஆய்வு

மாமல்லபுரத்துக் கடலோரத்தில் மீனவர்கள் நீருக்கடியில் கட்டடங்கள் பகுதிகளைக் கண்டதாகக் கூறிய இடத்தில் 2002இல் அறிஞர்கள் ஆய்வைத் தொடங்கினர். அந்த ஆய்வுத்திட்டம் இந்திய தேசிய கடலாய்வு நிறுவனத்தாலும் (National Institute of Oceanography) ஐக்கிய இராச்சிய “அறிவியல் ஆய்வுக் கழகத்தாலும்” (Scientific Exploration Sociey) இணைந்து மேற்கொள்ளப்பட்டன.

அந்த இரு குழுக்களும் கண்டுபிடித்தவை: கடற்கரையிலிருந்து சுமார் 500-700 மீ. தொலைவில் 5-8 மீ. நீருக்கும் மணல்படுகைக்கும் அடியில் சுவர்ப் பகுதிகள். அவை பரந்து விரிந்து கிடந்த அமைப்பைக் கண்டபோது அவை பல கோவில்களின் பகுதிகளாக இருந்திருக்க வேண்டும் என்று தெரியவந்தது. அந்தக் கட்டடங்கள் பல்லவர் காலத்தவை என்றும், முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன் காலத்தவை என்றும் அறிஞர் கருதுகின்றனர். மேலும் பல கண்டுபிடிப்புகள் வெளியாகலாம் என்றும் கூறினர்.

சுனாமி வெளிக்கொணர்ந்த கட்டடப் பகுதிகள்

2004, திசம்பர் 26இல் நிகழ்ந்த சுனாமியின் விளைவாக மாமல்லபுரத்துக் கடல் பகுதியில் கடல்நீர் சுமார் 500 மீ. பின்வாங்கியது. அப்போது ஊர்மக்களும் சுற்றுப்பயணிகளும் கடல் மண் பகுதியில் நீண்ட தூரம் வரிசையாக அமைந்த பெரிய பாறைகள் தோன்றியதைக் கண்டனர். கடல் நீர் மீண்டும் கரைநோக்கி வந்து மணல்பகுதியை மூடியதும் அப்பாறை வரிசைகளும் நீருக்குள் மூழ்கின.

ஆயினும், பல நூற்றாண்டுகளாகப் படிந்த மணல் படுகைகளை அலைநீர் அடித்துச் சென்றுவிட்டிருந்தது. சுனாமியின் விளைவாக மாமல்லபுரக் கடலோர எல்லையிலும் மாற்றம் ஏற்பட்டது. இதனால் கடலடியிலிருந்த பல சிலைகளும் கட்டடப் பகுதிகளும் கண்ணுக்குத் தென்படலாயின. [5]

மாமல்லபுரத்தின் மறைந்த கோவில்கள் பற்றிய ஆய்வைத் தொடர்கையில் சுனாமியின் விளைவாக வேறு கண்டுபிடிப்புகளும் வெளிவந்தன. கல் பாளங்கள் அமைந்த பகுதிக்குக் கீழே செங்கல்லால் ஆன கட்டடப் பகுதிகள் தெரியவந்தன. இந்த இருவகைக் கட்டுமானப் பொருள்களும் வெவ்வேறு காலத்தவை என்பது தெளிவு. கல் பாளங்கள் அமைந்த பகுதி பல்லவர் காலத்தது என்று கொண்டால் அதற்கு அடியில் உள்ள செங்கல் பகுதிகள் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கடைச்சங்க காலத்தைச் சார்ந்தவை என்பது அறிஞர் கருத்து.

சங்ககாலக் கோவில் பகுதிகள் கண்டுபிடிப்பு

சங்ககாலக் கட்டடங்களும் குடியிருப்புகளும் சுனாமி கடல்கோள் காரணமாக மறைந்திருக்க வேண்டும். இந்திய அகழ்வாய்வு ஆராய்ச்சிக் கழகத்தின் (Archeological Survey of India) சார்பாக நடந்த ஆய்வுமுடிவுகள் பற்றி டி. சத்தியமூர்த்தி இவ்வாறு கூறினார்: “சுனாமி அலைகள் வெளிக்கொணர்ந்த ஒரு பெரிய பாறைக் கல்வெட்டுகள் கி.பி. 935ஆம் ஆண்டைச் சார்ந்தவை. அவற்றில் மூன்றாம் கிருஷ்ணா என்ற கர்நாடக வம்ச மன்னன் கோவிலில் அணையா விளக்கு எரியும் வகைக்காகக் கோவிலிக்குப் பொன் கொடுத்த செய்தி உள்ளது. எனவே நாங்கள் இன்னும் ஆழமாக அகழ்ந்தோம். அங்கு நாணயங்கள், மண்பாண்டத் துண்டுகள், சுண்ணத்தால் ஆன சிறு உருவங்கள், பித்தளை விளக்குகள் போன்றவை கிடைத்தன. விரைவிலேயே 9ஆம் நூற்றாண்டு பல்லவ காலத்துக் கோவில் பகுதிகளைக் கண்டுபிடித்தோம்.”

அகழ்வாய்வு தொடர்ந்தபோது பண்டைய சங்கக் காலக் கோவில் பகுதிகள் தோன்றின. செங்கல் கட்டடப் பாணியிலிருந்து கருங்கள் பாளங்கள் அமைந்த கட்டடப் பாணிக்கு மாற்றம் ஏற்பட்டது தெளிவாகத் தெரிந்தது. சங்ககாலக் கோவில் தகர்க்கப்பட்டபின், அதன் அடித்தளத்தின் மீதே பல்லவர்கள் கோவிலை எழுப்பியுள்ளார்கள்.

சங்ககாலத்து சுனாமி

அகழ்வாய்வின் போது தெரிந்த மற்றொரு உண்மை, பல அடுக்குகளாக அமைந்த கடல் சிப்பிப் பரப்புகள் மற்றும் இடிமானங்கள். அவற்றின் அடிப்படையில் ஆய்வாளர்கள் அந்த இடத்தில் சுனாமி இரு முறை நிகழ்ந்திருக்க வேண்டும் என்று முடிவு செய்கின்றனர். பல்லவர் காலத்துக் கட்டடங்கள் 13ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட சுனாமியில் அழிந்தன. அதற்குக் கீழே மணலுக்கு அடியில் தெரிந்த செங்கல் கட்டடப் பகுதிகளைப் பார்க்கும்போது சங்ககாலத்தில் சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன்னிருந்த கோவிலும் சுனாமிக்கு இரையாகியிருக்க வேண்டும். இவ்வாறு இந்திய நில ஆய்வுக் கழக முன்னாள் இயக்குநர் எஸ். பத்ரிநாராயணன் கூறினார்.

இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் ஒரிசா, ஆந்திரா, தமிழ்நாடு உட்பட் 1,200 கி.மீ. தூரம் இந்த சுனாமி அழிவு ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன.

2004ஆம் ஆண்டு சுனாமிக்குப் பிறகு கடற்கரையிலிருந்து கடலுக்குள்ளாக சுமார் 1 கி.மீ. தூரத்திலும் பெரிய கட்டடங்கள் அழிவுப் பகுதிகள் கிடைத்துள்ளன. அவை முற்காலத்து மாமல்லபுரத்தின் மறைந்த கோவில்களின் பகுதிகளாக இருக்கலாம் என்று ஆழ்வியலார் கருதுகின்றனர்.

சுனாமி வெளிக்கொணர்ந்த சிங்கச் சிலை

2004ஆம் ஆண்டு சுனாமியால் கடலிலிருந்து வெளிப்பட்ட வரலாற்று ஆதாரங்களுள் மிகச் சிறப்புவாய்ந்தது பெரியதொரு சிங்கச் சிலை ஆகும்.மணற்கல்லால் ஆன இச்சிங்கம் கி.பி. 7ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்று அறிஞர் கருதுகின்றனர். இது பல்லவர் காலத்ததே என்பதற்குத் தெளிவான அடையாளங்கள் உள்ளன.

பிற கண்டுபிடிப்புகள்

2005 ஏப்பிரல் மாதத்தில் இந்திய அகழ்வாய்வுக் கழகமும் இந்திய கடற்படையும் மாமல்லபுரக் கடல்கரைப் பகுதியில் நீருக்குள் ஒலிச் செலுத்துவழி மற்றும் வீச்சளவு (sonar) நுட்பத்தைப் பயன்படுத்தி ஆய்ந்தனர். அதன்போது, 2004ஆம் ஆண்டு சுனாமி வெளிக்கொணர்ந்த பாறைக் கூட்டம் என்பது ஆறடி உயரமும் 230 அடி நீளமும் கொண்ட சுவரின் பகுதிகள் என்று கண்டனர். மேலும், கடற்கரையிலிருந்து 500 மீ. தூரத்தில் கடலுக்கடியில் வேறு இரண்டு கோவில்களின் பகுதிகளும் ஒரு குகைக்கோவில் பகுதியும் காணப்பட்டன. மேலும் கடலில் மூழ்கிய 25 மீ. நீளம் மற்றும் 28 மீ. அகலம் கொண்ட கோவிலின் கர்பகிரகம் (ஒவ்வொரு பக்கமும் 2.6 மீ. கொண்ட சமசதுரம்), அதைச் சூழ்ந்த பகுதி, பிரகாரம் ஆகியவையும் தெளிவாகத் தெரிந்தன. இடிந்து விழுந்த கோவில் சிகரம், கலசம் போன்றவையும் மாமல்லபுரக் கடற்கரைக் கோவிலில் உள்ளதுபோலவே உள்ளன.

கர்பகிரகப் பகுதியில் காணப்பட்ட கருங்கல் பாளங்களில் கட்டடக் கலைஞரின் கையெழுத்துப் போல ஒரு பறவை வரையப்பட்டுள்ளது. மேலும் அம்பும் வில்லும் உள்ளன. குறுக்கு நெடுக்காக இரு முக்கோணங்கள் ஒரு வண்ணத்துப் பூச்சி வடிவைக் காட்டுகின்றன. இத்தகைய ப்ரியமான சின்னங்கள் பல்லவர் காலக் கட்டடங்களில் இதுவரை காணப்படவில்லை என்று தெரிகிறது என்று ஆய்வாளர் கூறுகின்றனர்.

இப்பொருள்கள் பற்றியும் அகழ்வில் கிடைத்த கல்வெட்டுகள், பல்லவர் காலத்திற்கு முற்பட்டதாகத் தெரிகின்ற சுடுமண்ணால் (terracotta) கட்டப்பட்ட கிணறு போன்றவற்றைப் பற்றி டி.எஸ். சுப்பிரமணியன் ஃப்ரண்ட்லைன் இதழில் விரிவான தகவல்கள் தருகின்றார்

http://www.frontline.in/…/fl2…/stories/20050520005812900.htm

மாமல்லபுரத்தின் ஏழு கோவில்களா?

மாமல்லபுரத்தில் ஏழு கோவில் அமைப்புகள் இருந்தன என்ற புராதனச் செய்தி முற்றிலும் உண்மையே என்று கூறமுடியாவிட்டாலும், மேற்கண்ட கண்டுபிடிப்புகளின் விளைவாக, மாமல்லபுரம் பகுதியில் மாபெரும் கோவில் வளாகம் இருந்தது என்றும் கடல்கோள் காரணமாக அது பெரும்பாலும் மறைந்துவிட, இன்று ஒருசில கட்டடங்களே எஞ்சியுள்ளன என்பதும் தெளிவாகிறது.
#ப்யாரீப்ரியன்...
இணையத்தொகுப்பு..
https://m.facebook.com/story.php?story_fbid=120656368269815&id=105541249781327

Sunday 21 June 2020

புளூட்டோ கோள் ஏன் நீக்கப்பட்டதூ

#புளூட்டோ_கோள் ஏன் நீக்கப்பட்டது??..

இது தான் ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்..
திருவண்ணாமலை.

இன்று ப்ளூட்டோ என்ற ஓன்பதாவது கோள் நமது பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கப்படுவதற்கு முக்கியமான காரணம் இந்த இடம். வரலாற்று சிறப்புமிக்க இடம்.

நிறைய எரிக்கல் , துணை கோள்கள் , நம்மை போல் உயிரினங்கள் வாழ்கிறார்கள் என்று சந்தேகிக்கப்படும் சூரிய குடும்பங்கள் , இன்னும் இங்கு நம்மவர்கள் ஆற்றி உள்ள சாதனைகள் கணக்கில் அடங்காது , அப்படிப்பட்ட சிறப்புமிக்க இடத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா ..?
இது வேலூர்-திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் ஜவ்வாது மலைகளில் #காவலூர் என்ற சிற்றூரில் அமைந்துள்ளது.

இதனை நமது முன்னாள் பிரதமர்.திரு. இராஜீவ் காந்தியால்  திறந்து வைக்கப்பட்டது.
அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் கூட Northern Hemisphereஐ மட்டும் தான் ஆராய்ச்சி செய்ய முடியுமாம். ஆனால் இந்த பகுதிகளில் இருந்து Northern and Southern Hemispheres களை ஆராய்ச்சி செய்ய முடியும் என்பதுதான் இந்த இடத்தின் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.

Southern Hemisphere ல துல்லியமாக ஆராய்ச்சி செய்ய அமெரிக்கர்கள் கூட இங்கு தான் வர வேண்டும்.
மற்றுமொரு முக்கியமான அம்சம் இங்கு இருந்து மட்டுமே 300 நாட்களுக்கு மேலாக திறந்த வான் வெளி (Clear Sky ) கிடைக்கின்றன.
இந்த தொலை நோக்கி யின் கண்ணாடி( Lens ) 9.3 ( 90 இன்ச் ) மீட்டர் Diameter , உங்களால் நம்ப முடிகிறதா.??? இன்னும் ஆச்சரியமான விஷயம் இது முழுக்க முழுக்க இந்தியர்களால் குறிப்பாக தமிழகத்தில் தயாரிக்கப்பட்டது.

இங்கு 6 இன்ச், 10 இன்ச் , 13 இன்ச் , 18 இன்ச் , 24 இன்ச் , 30 இன்ச் , 40 இன்ச் , 48 இன்ச் மற்றும் 90 இன்ச் Telescope பயன்பாட்டில் உள்ளது. இந்த 48 இன்ச் Telescope ஜெர்மன்-ரஷ்யா-இந்தியா கூட்டு தொழில் நுட்பத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இங்கு நடைபெற்ற கண்டுபிடிப்புகள் மூலம் நமது நாடு உலக அரங்கில் தடம் பதித்தது வார்த்தைகளாலும் மற்றும் எழுத்துக்களாலும் கூற இயலாது.

இங்கு ஒவ்வொரு சனிக்கிழமை மாலை 5:00 மணிக்கு மேல் பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் இங்கு அனுமதிக்கபடுவார்கள். அவர்களுக்கு உங்கள் கண்களுக்கு பூமியை தவிர்த்து அனைத்து கிரகங்கள், புகழ்பெற்ற நட்சத்திரங்கள், கோள்கள், துனை கோள்கள் காண்பிக்கப்படும். உங்கள் ப்ரியமான பிள்ளைகள் பள்ளி புத்தகங்களில் மட்டும் படிக்கும் அவையை அவர்கள் புற கண்களுக்கு காண்பிக்க ஒரு அரிய வாய்ப்பு.

இங்கு அருகில் பீமா நீர்வீழ்ச்சி, குழந்தைகளுக்கான பூங்கா , படகு சவாரி, கற்கால மனிதர்கள் வாழ்ந்த வீடு, ஆங்கிலேயர்கள் கட்டிய கண்ணாடி மாளிகை, இயற்கை மருத்துவ பூங்கா, இயற்கை மலைத்தேன், பலாப்பழம், கொய்யா, ராம் சீதா பழம் அதிகமாக கிடைக்கும்.
உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் , உங்கள் கண்களுக்கு மிருகங்கள் கண்களில் படலாம்.
இங்கு தங்கும் விடுதிகள் இல்லை , வனத்துறை மற்றும் டிராவல்ஸ் பங்களா மட்டுமே உள்ளது.

உணவிற்கு ஜமூனாமத்தூர் மற்றும் ஆலங்காயத்திற்கு தான் செல்ல வேண்டும். இது மிகவும் அடர்த்தியான காட்டு பகுதி ஆதலால் டார்ச் லைட் போன்ற உபகரணங்கள் மிகவும் முக்கியமானது.

இந்த இடத்திற்கு செல்ல
1. பெங்களூர்- திருப்பத்தூர்-ஆலங்காயம்-காவலூர். 2.சென்னை-வேலூர்-வாணியம்பாடி – ஆலங்காயம்-காவலூர் ,
3. சேலம்- அரூர் – ஊத்தங்கரை – திருப்பத்தூர் – ஆலங்காயம்-காவலூர்
4.பாண்டிச்சேரி – திருவண்ணாமலை – போளூர் – ஜமூனாமத்தூர் – காவலூர்.
தகவல்: Indian Institute of Astrophysics.
#ப்யாரீப்ரியன்
~நன்றி:
திரு.Murugesan Ponnaiah ஐயா.

Saturday 20 June 2020

கடைசி மடையர்- நீரானிக்கர்

#மடைநுட்பம்?...
கிருஷ்ணகிரி மாவட்டம்... ஓசூரில் இராமநாயக்கன் ஏரியில் பல நூற்றாண்டுகளாக (சற்றேறக்குறைய700 ஆண்டுகள்) கம்பீரமாக வரலாற்று சின்னமாக விளங்கிவந்த இந்த மதகு அமைப்பின் சின்னம் சாலை விரிவாக்க பணிகளுக்காக அப்புறப்படுத்தப்பட்டு..
இந்த வரலாற்று எச்சத்தை மிகவும் பாதுகாப்பாக பிரித்து வைத்து இருந்தனர்.. வேறு இடத்தில் நிறுவ அனைத்து மக்களும் எதிர்பார்ப்பில் இருந்தநிலையில்..

#முகநூலிலும், புலனத்தின் வாயிலாகவும் அனைவரின் கவனத்திற்கும் கொண்டு சென்று மடை குறித்த #விழிப்புணர்வு ஏற்படுத்தியும், பல அமைப்புகள், சங்கங்கள்
அரசு அதிகாரிகள், ஆட்சியர் மற்றும் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் கோரிக்கை வைத்ததன் பலனாக..

ஓராண்டுக்கு பிறகு பலரின் முயற்சியின் காரணமாக அதே சாலையின் மற்றொரு பகுதியில் மீண்டும் அதே தூண்களை வைத்து பழமையை மாற்றாமல்?? கட்டுமான பணி தற்போது நடைபெற்று வருகிறது...

இச்செயல் கொஞ்சம் ஆறுதலாக இருப்பினும் அது நுட்பங்களை இழந்த , ஒரு பயன்பாடற்ற ஒரு காட்சி சின்னமாகவே கருதப்படும்.
நூறு ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஒரு வரலாற்று ஆய்வாளருக்கு பல்வேறு சந்தேகங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது
இப்போது மாற்றப்பட்ட இடத்தில் மாற்றப்பட்டதற்கான காரணத்தை கல்வெட்டாக எழுதி வைக்கவேண்டும் எனவும் அப்போதுதான் இதன் உண்மையான காரணம் விளங்கும் எனவும் வரலாற்று ஆர்வலர்கள் கருத்தும் கோரிக்கையாகவும் உள்ளது...

#நீர்மேலாண்மையில்_மடைநுட்பம்
ஏரியை  வடிவமைத்த  பிறகு  அதிலிருந்து  தண்ணீர் வெளியேறத்  தமிழன் கண்டுபிடித்த  தொழில்நுட்பம்தான் "மடை"

மடைகளை அமைக்க முதலில் பனைமரங்கள் பயன்படுத்தப்பட்டன. . வைரம் பாய்ந்த கட்டை என்று சொல்லப்படும் மரங்களையே  தேர்வுசெய்து அதன் உள்தண்டை நீக்கிவிட்டால் உறுதியான நீண்ட குழாய் தயாராகிவிடும். அதனை ஏரியின் அடியாழத்தில் பதித்து, அதன் உள் ஓட்டையில் கோரை, நாணல், களிமண் கலந்து அடைத்துவிடுவார்கள். இதுதான் ஆரம்பகால மடை. பிற்காலங்களில் பாறைகள், மரச்சட்டங்களில் மடைகள் அமைக்கப்பட்டது.

வெள்ளக்காலங்களில் மடைகளைத் திறப்பதற்கு என்றே ஆட்கள் இருப்பார்கள். மடையைத் திறப்பது சாதாரண விஷயமில்லை. உயிரைப் பணயம் வைத்து நீருக்குள் மூழ்கிச் செய்யும் பெரிய சாகசப்பணியாகும்.

மழையால் ஏரியில் தண்ணீர் நிரம்பி, கரையை உடைத்துக்கொண்டு செல்வதற்குமுன், ஒரே ஒருவர் மட்டும் ஏரிக்கரைக்குச்சென்று கடல்போல் கொந்தளிக்கும் ஏரிக்குள் குதிப்பார். மூச்சடக்கி நீரில் மூழ்கி அடியாழத்தில் இருக்கும் மடையின் அடைப்பை திறந்துவிடுவார்.
மடை திறந்ததும் புயல்வேகத்தில் வெளியேறும் வெள்ளம் மடைத்திறந்தவரையும் இழுத்துச்செல்லும். அந்த வேகத்திலிருந்து தப்பி பிழைப்பது மிகவும் கடினம்.

மடை திறக்க செல்பவர்கள் உயிர்பிழைப்பது அரிது. அவர்கள் தம் மனைவி, பிள்ளைகள் மற்றும் அனைவரிடம் பிரியமாக  பிரியா விடைபெற்றுச் செல்வார்கள். மடை திறக்கச்சென்று மாண்டவர்கள் அதிகம், மீண்டவர்கள் குறைவு. இவர்கள்தான் "#மடையர்கள்" என அழைக்கப்பட்டார்கள். வரலாற்றின் பக்கங்களில் இந்த தியாகிகளைப் பற்றிய குறிப்புகள், கல்வெட்டுக்கள், பதிவுகள் எதுவும் இல்லை. வரலாறு எழுதுபவர்கள் இதைக் கருத்தில் கொள்ளலாம் அல்லவா?
எம் குழந்தைகளுக்கு இவ்வீரத் தமிழ்த்தியாகிகளின் வாழ்வு ஒரு ஊக்கத்தையும் தியாகத்தையும் ஊட்டும் அல்லவா?
#ப்யாரீப்ரியன்
~~~~~~~~~~~~~~~~~~~~
இப்படிப்பட்ட புகழ்பெற்ற நுட்பமான வரலாற்று சின்னமான
(மேற்கண்ட புகைப்படத்தில் உள்ள  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராமநாயக்கன் ஏரியில் இருந்த மதகை பராமரித்து வந்த #சுப்ரமணியபிள்ளை  இவர்தான் ஒசூர் இராமநாயக்கன் ஏரி மதகின் #கடைசிமடையராவார். அதற்கு முன்பு #வெங்கடசாமிப்பிள்ளை என்பவரும் மடையை பராமரித்துள்ளனர்.
ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் அவரது குடும்பத்தினர் மாவுவிளக்கு செய்து பூஜைகள் செய்து இறுதியில் ஏருமைக்கன்று ஒன்றை பலியிட்டபின்பு தான் மடையை திறக்க செல்வார்கள் என தெரிவித்தனர்.
ஏரியின் கீழ்ப்பகுதியில் விவசாயம் செய்யும் குடும்பத்தினர் அறுவடையின் போது இவர் குடும்பத்தினருக்கும் ஒருபங்கு கொடுத்ததாகவும் அறியப்படுகிறது.
புகைப்பட உதவி : திரு.சண்முகம் அவர்கள், ஓசூர்)
#ப்யாரீப்ரியன்...
இதையும் பார்க்க.. விழிப்புணர்வு பதிவு
https://m.facebook.com/story.php?story_fbid=1037093899706947&id=100002190405617
~~~~~~~~~~~~~~~~~~~~
இந்த தகவலை காண..
https://www.facebook.com/100002190405617/posts/3071870229562627/













Wednesday 17 June 2020

காந்தியடிகளின் தமிழ் கையெழுத்து

#தமிழில்_கையெழுத்திட்ட_காந்தியடிகள் 

மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் ஒவ்வொரு நாளும் மாலைப் பொழுதில் மதுரை தொடர்வண்டி நிலையத்திற்குச் சென்று அங்கிருந்த புத்தகக் கடையிலும், தேநீர் கடையிலும் சிறிது நேரம் பொழுது போக்குவது வழக்கம். மதுரையில் அந்த நாளில் வேறு பொழுது போக்கு இடம் கிடையாது. 

1934-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ஆம் தேதி அன்று அவ்வாறே அந்த இளைஞரும், அவரது நண்பர்களும் மதுரை ரயில் நிலையத்தில் வரும், போகும் தொடர் வண்டிகளை வேடிக்கைப் பார்ப்பதும் தமக்குள் பேசி மகிழ்வதுமாக இருந்தனர். அப்போது மதுரை தேச பக்தர்களின் தலைவரான ஜார்ஜ் ஜோசப் துணைவியாரும், தியாகி தாயம்மாளும் தொடர்வண்டி நிலையத்திற்குள் நுழைந்தனர். அதைப் பார்த்து அந்த இளைஞர் வியப்படைந்தார்.

அவர் வீட்டிற்கு அருகாமையில்தான் ஜார்ஜ் ஜோசப் பின் வீடு இருந்தது. எனவே அந்த இளைஞர் அந்த குடும்பத்திற்கு நன்கு அறிமுகமானவர். தியாகி தாயம்மாளையும், அவர் நன்கு அறிவார். எனவே அவர்களிடம் சென்று விவரம் கேட்டபோது அவர்கள் வியப்பூட்டும் செய்தி ஒன்றைக் கூறினார்கள். "மானாமதுரை பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு அங்கேயே தொடர்வண்டியில் ஏறி காந்தியடிகள் கோவை செல்லவிருக்கிறார். மதுரையில் அவருக்கு அளிப்பதற்காக உணவு கொண்டு வந்திருக்கிறோம்" என அந்த இரு பெண்மணிகளும் கூறியதைக் கேட்டபோது அந்த இளைஞர் பெரும் பரபரப்படைந்தார்.

காந்தியடிகளைச் சந்திக்கும் மிகப்பெரும் வாய்ப்பு கிடைக்கப்போவதை எண்ணி மகிழ்ந்தார். அவர்களும் அவரை தங்களுக்குத் துணையாக இருக்கும்படி வேண்டிக் கொண்டனர். பழம் நழுவிப் பாலில் விழுந்தது போன்ற மகிழ்ச்சியை அவர் அடைந்தார். சற்று நேரத்தில் காந்தியடிகள் ஏறிவந்த தொடர்வண்டி மதுரைக்கு வந்து சேர்ந்தது. அந்தப் பெண்மணிகளுடன் இணைந்து காந்தியடிகள் இருந்த பெட்டிக்குள் அந்த இளைஞரும் நுழைந்தார்.

அந்த இளைஞரை காந்தியடிகளுக்கு ஜார்ஜ் ஜோசப் அறிமுகப்படுத்தி வைத்தார். தான் காண்பது கனவா? நனவா? என்ற திகைப்பில் இருந்த அந்த இளைஞர் சிறிது துணிவு பெற்று காந்தியடிகளிடம் கையெழுத்துக் கேட்டார். காந்தியடிகள் புன்னகையுடன்  "ஹரிஜன் நிதிக்கு 5 ரூபாய் கொடுக்க வேண்டும்' என்று கூறினார். அந்த இளைஞர் கையில் அப்போது காசு எதுவும் இல்லை. ஆனாலும், ஒரு கணம் கூட யோசிக்காமலும், தாமதிக்காமலும் தன் விரலில் அணிந்திருந்த தங்க மோதிரத்தைக் கழற்றி காந்தியடிகளிடம் மிக்கப் பணிவுடன் கொடுத்தார்.

அதைக்கண்ட காந்தியடிகள் அந்த இளைஞரைச் சீண்டிப் பார்க்க எண்ணினார். அவர் அருகே வீற்றிருந்த மீரா பென்னிடம் அந்த மோதிரத்தைக் கொடுத்து "இது உண்மையான தங்கம் தானா? என்று பார்'" என்று கூறினார். அவரும் அதை உற்றுப் பார்த்துவிட்டு உண்மையான தங்கம் தான் என்று உறுதிப்படுத்தினார். அதைக் கேட்ட காந்தியடிகள் கலகலவென்று வாய் விட்டுச் சிரித்தார். சுற்றிலும் இருந்தவர்களும் சிரித்தார்கள்.

அந்த மோதிரத்தை திருப்பி கொடுத்து விட்டு, "எங்கே உனது கையெழுத்து புத்தகம்?' என காந்தியடிகள் கேட்டார். அந்த இளைஞரிடம் கையெழுத்துப் புத்தகமும் இல்லை. அவரின் தடுமாற்றத்தைக் கண்ட மீரா பென் தனது நாட் குறிப்பிலிருந்து ஒரு தாளை கிழித்து நீட்டினார். "பார்! அவள் உன்னிடம் எவ்வளவு அன்பாக இருக்கிறாள்' என காந்தியடிகள் கூறினார். உலகம் போற்றும் காந்தியடிகளின் கையெழுத்தைப் பெறப் போகிறோம்" என்ற மகிழ்ச்சியுடனும், சற்று துணிவுடனும் அந்த இளைஞர் "தமிழில் கையெழுத்திட்டுக் கொடுங்கள்' என வேண்டிக்கொண்டார்.

காந்தியடிகளும் புன்னகையுடன் தமிழில் கையெழுத்திட்டார். அந்த கையெழுத்திற்குக் கீழே தனது தாய்மொழியான குஜராத்தி மொழியில் நாளைக் குறித்தார். பிறகு அந்தத் தாளை இளைஞரிடம் கொடுத்து "பத்திரமாக வைத்துக் கொள்' எனக் கூறினார். காந்தியடிகள் கையெழுத்திட்ட காகிதத்தை கிடைத்தற்கரிய பொருளைப் பெற்ற மகிழ்ச்சியுடன் அந்த இளைஞர் போற்றிப் பாதுகாத்தார். இன்றும் அந்த இளைஞரின் குடும்பத்தினர் காந்தியடிகளின் கையெழுத்தைப் ப்ரியமாக போற்றிப் பாதுகாத்து வருகின்றனர்.

அந்த இளைஞர் வேறு யாரும் அல்லர், மதுரை திருவள்ளுவர் கழகத்தை நிறுவியவரும், மதுரை தமிழ்ச்சங்க செயலாளராகப் பணியாற்றியவரும், மதுரையில் பல்வேறு தமிழ் மாநாடுகளைச் சிறப்பாக நடத்தியவரும், பழமுதிர்ச் சோலை முருகன் கோயிலைக் கட்டியவரும், விவேகானந்தா அச்சக உரிமையாளருமாக இருந்து மறைந்த அறநெறியண்ணல் #திரு_கி_பழநியப்பனார் அவர்களேயாவார்.
~~~~~~~~~~~~~~~~~~~~
சென்னையை அடுத்த குரோம்பேட்டை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் #சீத்தாபதி நாயுடு. இவரின் சொந்த ஊர் நாகப்பட்டினம். அங்கு செல்வந்தராக வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 1938-ல் பீகாரில் ஏற்பட்ட பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக மகாத்மா காந்தி அடிகள் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நிதி திரட்டினார்.

22.2.1938 அன்று நாகப்பட்டினம் அவுரி திடலுக்கு நிதி திரட்ட வந்த காந்தி அடிகளிடம், அப்போது 13 வயது சிறுவனாக இருந்த சீத்தாபதி நாயுடு தனது தந்தையுடன் சென்று பூகம்ப நிதியாக 5 ரூபாய் வழங்கினார். அவரது உதவும் தன்மையை பாராட்டிய காந்தி அடிகள், ஒரு சிறிய வெள்ளைத்தாளில் `காந்தி' என தமிழ் மற்றும் இந்தியில் கையெழுத்து போட்டுக் கொடுத்தார்.

அந்த கையெழுத்தை சீத்தாபதி நாயுடு பொக்கிஷமாக கருதி வெள்ளிப் பேழையில் வைத்துப் பாதுகாத்து வந்தார். பின்னர் சென்னைக்கு குடிபெயர்ந்து குரோம்பேட்டையில் தங்கிய சீத்தாபதி நாயுடு, காந்தி கையெழுத்து போட்டுக் கொடுத்த பேப்பரை தன் வாழ்நாளுக்கு பின்பும் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் 
23-ந்தேதி சென்னை அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தார்.

#ப்யாரீப்ரியன்..
புலனம் மற்றும் இணையத்தொகுப்பு

Thursday 11 June 2020

லேப்டாப் பழைய பேட்டரி பயன்

#லேப்டாப்களின் பழைய #பேட்டரிகளை கொண்டு ஏழைகளின் குடிசைகளுக்கு செலவின்றி ஒளியூட்ட முடியும்...

பயனற்றவை என்று கருதி தூக்கி வீசப்பட்டும் லேப்டாப்களின் #பழைய_பேட்டரிகளை கொண்டு இந்தியாவில் வசிக்கும் ஏழைகளின் குடிசைகளுக்கு ஒளியூட்ட முடியும் என சமீபத்திய ஆய்வு தெளிவுப்படுத்தியுள்ளது.

லேப்டாப்களில் பயன்படுத்தப்படும் சுமார் 5 கோடி ‘லித்தியம்’ பேட்டரிகள் பயனற்றவையாக ஆண்டுதோறும் குப்பையில் தூக்கி வீசப்படுகின்றன. இவ்வகையில், தூக்கி எறியப்படும் சுமார் 70 சதவீதம் பேட்டரிகளில் மிச்சமிருக்கும் ஆற்றலைக் கொண்டு ஒரு நாளைக்கு 4 மணி நேரம் வீதம் ஓராண்டுக்கு ஒரு ‘எல்.ஈ.டி.’ விளக்கை ஒளிரச் செய்ய முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள சான் ஜோஸ் நகரில் சமீபத்தில் ஒரு ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஏழை-எளிய மக்கள் அதிகம் வாழும் குடிசைப்பகுதிகள் நிறைந்த இந்தியாவைப் போன்ற முன்னேறும் நாடுகள், இந்த எரிசக்தியை பயன்படுத்தி, மின்சார செலவுகளை ஓரளவுக்கு மிச்சம் பிடிக்கலாம் என அந்த ஆய்வின் முடிவு சுட்டிக் காட்டியுள்ளது.

லேப்டாப்பின் பழைய பேட்டரிகளைப் போன்ற எளிதில் மின்னூட்டம் செலுத்தத்தக்க மூலப்பொருட்களை வாங்க அதிக முதலீடு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

இவை பெரும்பாலும் குப்பைகளில் கிடைக்கக்கூடிய பொருட்களில் ஒன்றாக இருப்பதால், குடிசைகள் தோறும் ‘சோலார் பேனல்’களை பொருத்தி, அதன் மூலம் பகல் நேரத்தில் கிடைக்கும் சூரிய சக்தியை இந்த பழைய பேட்டரிகளில் சேமித்து, மின்சக்தியாக மாற்றலாம்.

அந்த மின்சக்தியின் வாயிலாக, ஏழை மக்களின் குடிசைகளை செலவே இல்லாமல் இரவு வேளைகளில் ஒளியூட்ட முடியும் என்பதை இந்த ஆய்வின் முடிவு வலியுறுத்துகின்றது.
#ப்யாரீப்ரியன்..மீள்...(2014)
https://m.facebook.com/story.php?story_fbid=766322816784058&id=100002190405617

பண்டைய இசைக்கருவிகள்

பாரம்பரிய #இசைக்கருவிகளை அறிந்து கொள்ள..
இசைக்கருவிகள்
~நரம்புக் கருவிகள்
~துளைக் கருவிகள்
~தோற் கருவிகள்
~கன கருவிகள் என நான்கு வகைகளே....

#முரசு
தமிழ்நாட்டில் மன்னர்கள் காலத்தில் வழக்கத்தில் இருந்து வந்துள்ளது.
இந்த முரசுகளில் மூன்று வகை உண்டு.

#வீரமுரசு
இது போர்க் காலங்களில் பயன்படுத்தப்படுவது. போருக்குச் செல்லும் முன்னும், போர் நடக்கும் போதும், போர் முடிந்த பின்பும் முரசு கொட்டுதல் அக்கால வழக்கம். இந்த முரசுவிலிருந்து வெளிவரும் சப்தம் வீர உணர்வினைத் தோற்றுவிப்பதாக இருக்கும். இந்த முரசு வைப்பதற்காகவே உயரமான இடத்தில் தனி மேடை ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். இந்த மேடையை முரசுக் கட்டில் என்று சொல்வர்

#தியாகமுரசு
இது பொருள்களை அன்பளிப்பாக அளிக்க விரும்புபவர்கள், வறியவர்களை வரவேற்க அமைக்கப்பட்ட முரசு இது.

#நியாயமுரசு
நீதி வழங்கும் காலங்களில் நியாயம் கேட்க விரும்புபவர்களை அழைக்க அமைக்கப்பட்ட முரசு இது. (மனுநீதிச் சோழன் அரண்மனை முற்றத்தில் கட்டப்பட்டிருந்த ஆராய்ச்சி மணி இது போன்றது)

#உடல் (இசைக்கருவி)
உடல் என்பது தோற்கருவி வகையைச் சார்ந்த ஒரு தமிழர் இசைக்கருவி ஆகும். இது தவிலைவிட பெரிய சீரான உருளை வடிவுடையது. பெரிய உடல், சின்ன உடல், சன்ன உடல் என்று அளவின் அடிப்படையில் மூன்று வகை உடல்கள் உள்ளன

#ஊதல் (சங்ககாலம்)
சங்ககால ஊதல் வகைகளில் குழல், தூம்பு முதலானவை குறிப்பிடத்தக்கவை.
முழவு, ஆகுளி, தட்டை, எல்லரி, பதலை முதலானவை முழக்கும் பறைக்கருவிகள். கோடு என்னும் யாழ் நரம்புக்கருவி. கூத்தர் இவ்வகையான இசைக்கருவிகளை வழிநெடுக முழக்கிக்கொண்டே ஊர் ஊராகச் செல்வதும் ஊர்மக்களுக்கு இசையோடு பாடி ஆடிக் காட்டுவதும் வழக்கம்.

#குழல்
குழல் தொன்றுதொட்டு இன்றும் பயன்பாட்டில் உள்ள இசைக்கருவி.

#உயிர்த்தூம்பு
ஊதும் துளைகளைக் கண்ணாகக் கொண்ட இதன் இசை யானை பிளிறுவது போல இருக்கும்.

#குறும்பரந்தூம்பு
இது ஏழிசைப் பண்ணில் இளியிசையைக் கூட்டித் தரக்கூடியது.

#எக்காளம்
எக்காளம் என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். இது நான்கு பித்தளை அல்லது தாமிரக் குழாய்கள் சேர்ந்து வாய் வைத்து ஊதும் துளையுடன் கூடிய இசைக் கருவி ஆகும்.
எக்காளம் ஊதுவது வெற்றியின் அடையாளமாக கருதப்படுகிறது. பழங்காலத்தில் பகையரசரை வென்ற மன்னவர் எக்காளம் இசைத்து மகிழ்வர். ஆலய வழிபாட்டு ஊர்வலங்களிலும் இது இசைக்கப்படுகின்றது. சிறுதெய்வ வழிபாட்டின் சாமியாடுதல் அல்லது அருள் ஏறுதல் நிகழ்வில் உடுக்கை மற்றும எக்காள இசையின் பங்கு முக்கியமானது.

#கடம்
கடம் கருநாடக இசையுடன் தொடர்புடைய தென்னிந்தியத் தாள வாத்தியக் கருவிகளில் ஒன்றாகும். இது மிக எளிமையான ஓர் இசைக்கருவி ஆகும். இது ஒரு பெரிய மண் பானையில் தட்டுவதன் மூலம் ஒலி எழுப்பப்படும் இசைக்கருவியாகும். கட இசைக்கலைஞர்கள் அமர்ந்த நிலையில் கடத்தின் வாயைத் தன் வயிற்றோடு ஒட்டவைத்துக்கொண்டு இரண்டு கைகளாலும் அடித்து வாசிப்பார்.
கர்நாடக இசைக் கச்சேரிகளைப் பொறுத்தவரை, மிருதங்கத்தைப்போல இன்றியமையாத ஓர் இசைக்கருவியாக இல்லாவிட்டாலும், பல இசை நிகழ்ச்சிகளில் கடம் பயன்படுத்தப்படுகின்றது.

#கஞ்சிரா
கஞ்சிரா சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். பஜனைகளிலும், கிராமிய மக்களாலும் பயன்படுத்தப்படும் வாத்தியம் இதுவாகும்.

#கொக்கறை
கொக்கறை என அறியப்படும் நெருக்கமான இரு இசைக்கருவிகள் உள்ளன. ஒன்று மாட்டின் கொம்பால் செய்யப்படுவது. மற்றையது இரும்புக் குழல். முதலாவது கோயிலிலும், இரண்டாவது சாற்றுப்பாடலின் போதும் பயன்படுத்தப்பட்டது.

#கொடுகொட்டி
தோற்கருவி வகை சார்ந்த தமிழர் இசைக்கருவிகளுள் ஒன்று. இது ஒரு வகைப் பறை எனும் முழவுக்கருவியாகும். இதனைப் பற்றிய குறிப்புகள் சிலப்பதிகாரத்திலும் தேவாரத்திலும் உள்ளன. இக்கருவி தற்காலத்தில் கிடுகிட்டி என்றழைக்கப்படுகிறது. நாகசுரக் கச்சேரிகளிலும் இடம்பெறுகிறது.

#கொம்பு
இது ஒரு தூம்பு வகை தமிழர் இசைக்கருவி ஆகும். இது ஒரு ஊது கருவி. நாட்டுப்புற இசையிலும் கோயில் இசையிலும் கொம்பு இசைக்கருவி பயன்படுகிறது.
கொம்பு பண்டைக் காலத்தில் விலங்குகளின் கொம்புகளைப் பயன்படுத்தியும், பின்னர் மூங்கிலாலும், தற்காலத்தில் உலோகத்தாலும் செய்யப்படுகிறது.

#சங்கு
சங்கு என்பது ஒரு காற்று இசைக் கருவி. தமிழர் மற்றும் இந்திய இசையில், பண்பாட்டிலும், கோயில் வழிபாட்டின் போதும் பயன்படுகிறது. இந்து சமயம் , வைணவ கடவுளான விஷ்ணுவின் சின்னமாக சித்தரிக்கப்படுகிறது.

#சிறுமுரசு
சிறுமுரசு அல்லது சாயரட்சை மேளம் என்பது தோற்கருவி வகை சார்ந்த ஒரு தமிழர் இசைக் கருவி. இது "சிறிய அரைச்சட்டியில் புள்ளிமான் தோல் கொண்டு வார்க்கப்பட்டது." இதனை கோயில்களில் மாலை வழிபாடுகள் முடிந்ததும் இசைக்கப் பயன்படுத்தினர்.

#பெருமுரசு.
தோற்கருவி வகை சார்ந்த ஒரு தமிழர் இசைக் கருவி. இது அரைக் கோள வடிவுடையது. இது "பெரிய இருப்புச் சட்டியில் மாட்டுத் தோலை வார்த்து உருவாக்கப்படும். பண்டைக் காலத்தில் அறவிப்பு அல்லது தொடர்பாடல் கருவியாகப் பயன்படுத்தப்பட்டது.

#சேமக்கலம்
சேமக்கலம் என்பது கஞ்சக்கருவி வகை சார்த ஒரு தமிழர் இசைக் கருவி. இது தூய வெண்கலத்தால் ஆனது. தாதராட்டத்தில், கோயில்களில், இறப்பு வீடுகளில் இக் கருவி இசைக்கப்படுகிறது.

#தமுக்கு
தகவல் தெரிவிக்க உதவும் ஒரு இசைக் கருவியாகும்.

#தம்பட்டம்
சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். இதன் ஒரு பக்கம் தோலால் மூடப்பட்டிருக்கும். டண்டண் என்று கேட்கும் படியாக கிராம தேவதைகளின் திருவிழாக்களில் ஓர் இனத்தார் தம்பட்டங்களை வாசிப்பதை காணலாம்.

#தவண்டை
சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். உடுக்கை ரூபத்தில் உள்ள பெரிய தாளக் கருவியே தவண்டை ஆகும். வழக்கமாக மாரியம்மன் கோவில்களில் இந்த இசைக் கருவி வாசிக்கப்படுவதைக் காணலாம். தவண்டை, குச்சியால் அடித்து வாசிக்கப்படுகின்றது.

#தாரை
12 அடி வரையான நீளத்தைக் கொண்ட ஒரு பழந்தமிழ் ஊதுகருவி. பல்வேறு சடங்குகளில் இக் கருவி பயன்படுகிறது. இக் கருவி சீரான, இடை நிற்காத இசை தருவது.

#தாளம்
ஒரு கஞ்ச வகை தமிழர் இசைக்கருவி. இதற்கு சிங்கி, மணி, ஜாலர் என வேறு பெயர்களும் உள்ளன. இது கைக்கு அடக்கமான வட்ட வடிவிலான உலோகத்தால் ஆன இரு பாகங்களைக் கொண்டது. இரண்டையும் சேர்ந்து தட்டி தாளம் எழுப்புவர். பல்வேறு இசைக்கருவிகள் சேர்ந்து வாசிக்கப்படும் போது இசையின் கால அளவுகளை நெறிப்படுத்தும் கருவி தாளம் ஆகும்.

#திமிலை
இசைக்கருவிகளுள் ஒன்றாகும். இது மரத்தினால் செய்யப்பட்டு தோலினால் கட்டப்பட்ட தோற்கருவியாகும். இது பாணி எனவும் அழைக்கப்படுகிறது. மணற்கடிகார வடிவில் இருக்கும் திமிலை இசைக்கருவியானது கேரளா மற்றும் தென்னிந்தியக் கோவில்களில் இசைக்கப்படுகிறது. நன்கு செப்பம் செய்யப்பட்ட பலா மரத்தில் செய்யப்பட்டு கன்றின் தோலால் (குறிப்பாக 1-2 ஆண்டேயான கன்றின் தோல்) மூடப்பட்ட இருமுக முழவுக்கருவிகளுள் ஒன்று. இக்கருவி பஞ்சவாத்தியம் எனப்படும் கருவிகளுள் ஒன்றாக கேரளா மாநிலக் கோவில்களில் இசைக்கப்படுகிறது.

#திருச்சின்னம்
சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். இது ஒரு காற்று வாத்தியம் ஆகும். இது ஜோடிக் குழாய்களால் ஆனது. இந்த இசைக் கருவி தாசரிகளால் ஆலய வழிபாட்டின் போது வாசிக்கப் படுகின்றது.

#நகரா.
ஒரு தோல் இசைக்கருவியாகும். மிகப்பெரிய வடிவம் கொண்ட இந்த இசைக்கருவி பெரும்பாலும் கோவில்களில் நுழைவாயில் அருகே இடம்பெற்றிருக்கும்.

#நமரி
மேள தாளங்களோடு வாசிக்கப்படும் ஓர் ஊதுகருவி. இது யானையின் பிளிறல் போன்று ஒலி எழுப்பக் கூடியது. இதனை கொண்டாட்ட நிகழ்வுகளிலும் துக்க நிகழ்வுகளிலும் வாசிப்பர்.

#நாதசுவரம்
துளைக்கருவி (aero phones) வகையைச் சேர்ந்த ஓர் இசைக்கருவியாகும். இது நாதஸ்வரம், நாதசுரம், நாகசுரம், நாகஸ்வரம். நாயனம் என்று பலவாறு அழைக்கப்படுவது உண்டு. சிறப்பாகத் தென்னிந்தியா, இலங்கை போன்ற இடங்களிலும், தென்னிந்திய இனத்தவர் வாழும் உலகின் பிற பகுதிகளிலும் இந்த இசைக்கருவி வழக்கில் உள்ளது. திறந்த இடத்தில் இசைப்பதற்கு ஏற்றது. வெகு தூரத்தில் இருந்து கேட்டாலும் இன்பத்தைத் தரும் இயல்பினைக் கொண்டது.

#ஐம்முக_முழவம்
பஞ்சமுக வாத்தியம் எனும் ஐம்முக முழவம் வடிவத்தில் மிகவும் பெரிய தோலிசைக்கருவி ஆகும். குடமுழா, குடபஞ்சமுகி என்று இதற்கு பல பெயர்கள் உண்டு. தமிழ்நாட்டில் சில பெருங்கோவில்களில் மட்டும் இந்த இசைக்கருவி இசைக்கப்படுகிறது. திருவாரூர், திருத்துறைப்பூண்டி ஆகிய தலங்களில் இன்றும் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்படுகிறது.

#பம்பை
பம்பை போன்ற தோல் இசைக்கருவிகளை "அவனத்த வாத்தியம்" (Percussion Instrument) என்று வகைப்படுத்தியுள்ளார்கள். "அவனத்த" என்றால் மூடிய என்று பொருள். பலா மரத்தில் உருளை வடிவத்தில் செய்யப்பட்ட பம்பையின் இரு பக்கங்களிலும் முரட்டு தோல் மூடியுள்ளது. பலா மரத்துக்குப் பதிலாக பித்தளையாலும் பம்பை செய்யப்படுவதுண்டு.

#பேரிகை
தகவல் தெரிவிக்கப் பயன்பட்ட ஒரு இசைக் கருவியாகும். இந்த இசைக்கருவி தமிழ்நாட்டில் மன்னர்கள் காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அரசனுடைய கட்டளைச் செய்தி, திருமணச் செய்தி, ஊர்வலம் முதலிய தகவல்களை நகரில் இருப்பவர்களுக்கு அறிவிக்க இந்தக் இசைக் கருவியைப் பயன்படுத்தியிருக்கின்றனர். அலங்கரிக்கப்பட்ட யானையின் முதுகில் பேரிகையை வத்து முழக்குவர். அதன் பின்பு சொல்ல வேண்டிய தகவல் தெரிவிக்கப்படும். இப்படி அறிவிப்பவர்கள் வள்ளுவர்கள் எனப்பட்டனர்.

#பேரிமத்தளம்
தோற்கருவி வகையைச் சார்ந்த தமிழர் இசைக் கருவி ஆகும். இது மிருதங்கத்தை விட நீண்டது. பலாக்கட்டையால் செய்யப்பட்டு ஆட்டுத் தோல் போர்த்தப்படுவது. அரளிக்குச்சியால் ஒரு முகத்தில் மட்டும் வாசிக்கப்படுவது. தற்காலத்தில் சில பெரிய கோயில்களில் மட்டும் உலாவின் போது பயன்பாட்டில் இருக்கிறது.

#மகுடி
இந்தியாவில் தோற்றம்பெற்ற ஒரு பண்பாட்டு இசைக்கருவி ஆகும். சமயச் சடங்குகளில் பொதுவாகப் பயன்படுத்தப் படுகிறது. இந்தியாவின் கிராமிய இசையிலும் பாம்பாட்டிகளாலும் பன்னெடுங்கலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

#மண்மேளம்.
தோல் கருவி வகை தமிழர் இசைக்கருவி. இது பானை வடிவில் மண்ணால் செய்யப்பட்டு இரு பக்கமும் மாட்டுத் தோல் வார்க்கப்பட்ட ஒரு கருவி. பொதுவாக ஒரு பக்கம் கையாலும் மறுபக்கம் குச்சியாலும் வாசிப்பர்.

#முகவீணை
முகவீணை அல்லது கட்டைக்குழல் என்பது ஒரு துளைக் கருவி வகை தமிழர் இசைக் கருவி. நாதசுவரம் போன்று ஆனால் அதை விட குட்டையானது . பரவலாக அறியப்பட்ட நாதசுவரத்தின் ஆதிவடிவம். தூத்துக்குடி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில், இக்கலை மிகச் சிலரால் நிகழ்த்தப்படுகிறது. அருந்ததியர் சாதியினர் மட்டுமே இக்கலையை நிகழ்த்துகின்றனர்.
கட்டைக்குழல், தவில், பம்பை, உறுமி ஆகிய இசைக்கருவிகள், இக்கலையில் பயன்படுத்தப்படுகின்றன. இக்கருவியில் ஓசையிடுவதற்கு, ஏதுவாக ஏழு துளைகள் காணப்படும். இக்குழலின் ஓசை, நாயனத்தின் ஓசையைவிட, உச்ச நிலை அதிர்வைக் கொண்டது. திரைப்பட இசையினையே இக்கலைஞர்கள் பெரிதும் இசைக்கின்றனர்.
கோயில்களிலும், ஆட்டங்களிலும், கூத்துக்களிலும் இக்கருவி பயன்பட்டு வந்திருக்கிறது. இக்கலையின் நிலை, தற்போது மதிப்பிழந்து காணப்படுகிறது.

#முழவு
இசைக்கருவிகளுள் ஒன்றாகும். முழக்கம் என்ற சொல்லின் பொருளைக் கொண்டு முழவுக்குப் பெயர் அமைத்திருக்கலாம். பனைமரத்தடி, பலாப்பழம் போன்றவை இதற்கு உவமையாக சுட்டப்பட்டுள்ளன. இது குறுங்கம்பு கொண்டும் கைவிரலைக் கொண்டும் அடித்துத் தாளவிசை எழுப்பிச் சுவைக்கும் கருவியாகும். முழவு என்ற சொல் தாளக் கருவிகளைச் சுட்டும் பொதுச் சொல்லாகவும், ஒரு குறிப்பிட்ட கருவியைச் சுட்டும் சொல்லாகவும் இலக்கியங்களில் இடம் பெறுகிறது. சிலப்பதிகார காலத்தில், தாளக் கருவிகளுள் ‘தண்ணுமை’ தலைமைக் கருவியாய் விளங்கியது.

#யாழ்
பண்டைய இசைக்கருவிகளில் மிகச் சிறப்பு வாய்ந்தது ஆகும். யாழ் என்பதற்கு நரம்புகளால் யாக்கப்பட்டது அல்லது கட்டப்பட்டது என்பது பொருள். பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, மிடற்றுக் கருவி என்று வகைப்படுத்துவர். இவற்றில் நரம்புக் கருவியாகிய யாழே, தமிழர் வாசித்த முதல் இசைச் கருவியாகும். நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி கருவி யாழ். இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் வழிவந்த வீணை இன்று நரம்பிசைக் கருவிகளில் முதன்மை வகிக்கிறது.

#வீணை
ஒரு நரம்பு இசைக்கருவி. மிக அழகிய இசைக்கருவியான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்திய இசையின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்தக் கருவியின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தலாம்.
~வீணை வகைகள்
உருத்திரவீணை,விசித்திர வீணை,சித்திரவீணை,
நவசித்திரவீணை,சாத்வீக வீணை...

மேலும் விளக்கமே கிடைக்காத இன்னும் பல இசைக்கருவிகளையும் நம் முன்னோர்கள் கையாண்டு இருக்கிறார்கள். அவைகள்,
ஏழில், கத்திரிகை, கண்டை,  கரதாளம், கல்லலகு, கல்லவடம், கவிழ், கழல், காளம், கிணை, கிண்கிணி,
கிளை, கின்னரம், குடமுழா, கையலகு, கொட்டு, சச்சரி,
சலஞ்சலம், சல்லரி, சிரந்தை, சின்னம், தகுணிச்சம், தக்கை, தடாரி , தட்டழி தத்தளகம், தண்டு, தமருகம், துத்திரி, துந்துபி, துடி , தூரியம், தொண்டகம், நரல், சுரிசங்கு, படகம், படுதம், பணிலம், பல்லியம், பறண்டை,பாணி, பிடவம், மணி, மருவம், முரவம், முருகியம், முருடு, மொந்தை,
வங்கியம், வட்டணை, வயிர்,
வெங்குரல் என ஏராளம்...

#ப்யாரீப்ரியன்...
இணையத்தொகுப்பு...
https://m.facebook.com/story.php?story_fbid=3038903839525933&id=100002190405617