Wednesday 24 May 2017

மழை நீரை மட்டுமே அருந்தும் சட்கா பறவை ...

#சட்கா பறவை..
இப்பறவை மழைநீரை மட்டுமே அருந்தும்...
ஆறுகள் ஏரிகள் அல்லது குளங்களிலோ வேறு எங்கும் தண்ணீர் அருந்துவதில்லை..
இந்த பறவை சத்தம் இட்டால், பருவமழை தொடங்கும் என்பது முன்னோர்கள் நம்பிக்கை..
இந்தியாவில் சடகா என்றழைக்கப்படும் இப்பறவை மற்ற நாடுகளில் யாக்கோபின் குக்யூ என்று அழைக்கப்படுகின்றது.
சமீபத்தில், இப்பறவை ஆந்திர காட்டில் காணப்பட்டதாக அறியப்படுகிறது.
இப்பறவையை கவிஞர் காளிதாசர் தனது "மேகதூத்" காவியத்தில் குறிப்பிட்டுள்ளார்.
#ப்யாரீப்ரியன்..

Tuesday 23 May 2017

கல்வெட்டும் கதை சொல்லும்..ப்யாரீப்ரியன் தொகுப்பு ..

அனுசோனை கல்வெட்டும்..நடுகல்லும்..கதை சொல்லும் ......
-------------------------------------------------------------------------------
(#உளிமகிழ் ராஜ்கமல் அய்யாவின் வரலாற்று #கற்பனைப்பதிவுகளின்_தொகுப்பு )
--------------------------------------------------------------------------------
கிருஷ்ணகிரி மாவட்டம்.. கெலமங்கலம் அருகே உள்ள #அனுசோனையில் உள்ள
இராஜேந்திரசோழனின்
#கல்வெட்டின்_செய்தி...
“..ஸ்ரீ கெங்கையு கிடாரமு பூர்தேச
மு கொண்ட கோப்பரகேசரி பன்மராகிய ஸ்ரீ ராஜே
(ந்)திர சோழ தேவர்க்கு யாண்டு உயஅ
நுழம்பபாடியான நிகரிழிசோழ
மண்டலத்து தகமாரு நாட்டு குயினா
ட்டு அஞ்சிட்டத்தில் நாய......
ர்கங்க ஆடவர் சாமியாரு மகன்
கங்கமார்த்தாண்ட ஆடவர்சாமி
கோயில் காயத்துக்கு ஏர்ப்ப
ணிசெய்து குத்தி அளித்து பட்டான்”
--------------------------------------------------------------------------------
இனி #உளிமகிழ் ஐயாவின் கைவண்ணம்.. ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
#ஆடவர்சாமி - 1.
நிகரிழிசோழ மண்டலத்து குயிநாடு எனும் அழகிய கிராமம்.
இராஜேந்திர சோழரின் 28ம் ஆட்சியாண்டு :
அந்தப் புலி மெல்ல மேலேறியது பெரும் பள்ளத்தில் இருந்து. உட்புறமாய் வளர்ந்திருந்த மரமொன்று பள்ளத்தின் நீட்சியை மறைத்திருந்தது. மண்பரப்பில் இருந்து பதினைந்து அடி ஆழம்.. அப்படியே உள்புறமாய் பத்தடிக்கு நீண்டிருந்தது, மரத்தின் வளர்ச்சியால் எவருக்கும் தெரியாமல் போனது.
மரத்தின் கிளைவழியே மெல்ல ஏறிவந்த காட்டுப்புலி, கடைசி நான்கடியை சாதாரணமாகத் தாண்டியது. அருகிருந்த புதர் வழியே மறைந்திருந்து நோட்டமிட்டது.
மூன்று புறமும் வயல்வெளிகள். நேற்றுவரை முற்றியிருந்த கதிர்களால், தங்கநிறச் சேலைபோர்த்தி மிளிர்ந்திருந்த பூமித்தாய், அறுவடை முடித்து, பிரசவித்த பெண்ணாய் ஒற்றை மண் ஆடையை உடுத்தி தளர்வாய் குழைந்திருந்தாள். கணவனான ஆதவனோ, தன் பொன் நிறக் கரங்களால் அவள் நெற்றிகோதி நின்றிருக்க, பிள்ளை பெற்ற பெருமிதத்தில், பரவசமாக படுத்திருந்தாள்.
வானென்னும் பெண்ணின் தாய், மகளுக்கும், மருமகனுக்கும் இடையே நெகிழ்ந்திருக்கும் அன்பு கண்டு நாணி முகம் சிவக்க, அந்தி சாய ஆரம்பித்தது.
புலி சுற்றி நோக்கியது. இடப்புறமாக மேய்ச்சல் நிலம் நோக்கி நகர்ந்தது. ஆவினங்கள் ஆடி, ஓடி, விளையாடி, இரையுண்டு, தத்தம் இருப்பிடம் நோக்கி வரிசையாகத் திரும்ப, மேய்த்துக் கொண்டிருந்த இடையனின் ஒவ்வொரு குரலையும் உத்தரவாய் ஏற்று நகர்ந்து கொண்டிருந்தன.
தன் கஞ்சிக் கலயத்தையும், கைக்கோலையும் எடுத்தபடி, ஆவினங்களின் நடுவில் அவைகளோடு பேசியபடியே நடக்க ஆரம்பித்தான் அந்த இடையன்.
செவலைப் பெண்ணே.. வரவர புல்மேய்வதைக் குறைத்துக் கொண்டாய். உன் மடியின் கனம் குறைகிறது. நாளை இதுபோல் ஏமாற்றலாம் என எண்ணாதே.. செல்லமாக மிரட்டினான் ஒரு பசுவை.
அடேய் காரிக்காளையா.. வரவர உன் முரட்டுத்தனம் எல்லைமீறிப் போகிறது. அருகில் எவரையும் மேயவிட மறுக்கிறாய். உன்னைத் தண்டிக்கும் நிலைக்கு என்னைக் கொண்டு சென்று விடாதே.. எச்சரித்தான் ஒரு காளையை.
கருமைநிறக் கன்றொன்று அவனருகில் முட்டிவிட்டு முன்னேற..
இதோ பாரய்யா.. தந்தையை மிரட்டினேன் என்று மகள் முட்டுகிறாள்.. இவைகளுக்குள்ளும் நம்மைப் போல் பாச உணர்வு உண்டுதான் போல.. தனக்குள்ளேயே கூறிக்கொண்டான்.
அந்தப் புலி சத்தமின்றி ஆவினங்கள் வரும் திசையை நோக்கி முன்னேறியது. இடப்புறமாய் வேம்பின் மரம் ஒன்று விருட்சமாய் வளர்ந்திருக்க.. அதன் மேலேறி தாழ்ந்த கிளையொன்றில் பதுங்கியது.
அருகே இருந்த சிறு குளத்தில் நீர் அருந்தத் தொடங்கின
ஆவினங்கள். அடங்காத பிள்ளைகளாய் கன்றுகள் சில நீரை சிதறடித்து விளையாடவும் ஆரம்பித்தன. இடையனின் பார்வை படாது என நினைத்து எதிர்புறமாய் சென்று குளத்தின் மறுகரையிலும் கும்மாளமிட்டன.
நிறைந்த வயிறு.. குளிர்ந்த நீர்.. குளிர்ச்சியான மாலை நேரம்.. இடையனின் கோல்தட்டும் சத்தம், அதில் கட்டியிருந்த சிறு சலங்கை மணியின் ஒலி.. முற்றிய கதிர்கள் அறுத்த நெல்வாசம்.. சிறு சிறு குன்றுகளாய் வைக்கோல்.. வயல்வெளி குறுக்கே.. ஊரை நோக்கி நடைபோட ஆரம்பித்தன தம் இடையனோடு.
முன்னும் பின்னுமாய், நடுவில் இடையனோடு கூட்டமாய் ஆவினங்கள் அந்த வேம்பின் நிழல்தாண்டி கடந்து கொண்டிருந்தன. வீட்டு நினைவுகளில் மூழ்கியிருந்த இடையனும், குளக்கரையின் மறுகரையிலேயே தங்கிவிட்ட அந்த கரியநிறக் கன்றினை மறந்துபோக, சத்தம் ஏதுமில்லையே என நிமிர்ந்து பார்த்த கன்றானது, சற்றுத் தொலைவே தனது கூட்டம் செல்வதைக் கண்டு குரலெழுப்பி ஓடியது.
வேம்பின் வலப்புறமாய் ஆவினங்களின் கூட்டம். இடப்புறமாய் இந்தக் கன்று ஓடிவந்து கொண்டிருக்க..
கன்றின் குரல் கேட்டு இடையனும் திரும்பிப்பார்க்க..
வேம்பின் கீழிருந்து கடக்கும் கன்றின் மேல், மரத்தின் மேலிருந்த புலியின் பார்வை குறிவைக்க..
தாயை நோக்கி ஓடியது கன்று..
கன்றினை நோக்கிப் பாய்ந்தது புலி.
~------------------------------------------------------------------------------
#ஆடவர்சாமி - 2 :
அந்தி சாயும் நேரம், இடையனின் அலறல், ஒட்டுமொத்த கிராமத்தையே உலுக்கியது. ஊர்த்தலைவர் தலைமையில் அவசரமாய் சபை கூடியது. காட்டுப்புலி தாக்குதல் பற்றி விவாதிக்கப்பட்டது. பலியான கன்றின் உரிமையாளருக்கு அதற்கான ஈடு வழங்கவும் சபை முன்வந்தது.
இளைஞர் கூட்டம் தீப்பந்தங்களோடும், வேல் கம்புகளோடும் அவ்விடம் நோக்கி விரைந்தனர். புலியால் பாதி உண்ணப்பட்ட நிலையில் இருந்த கன்றின் உடல் மீட்கப்பட்டதே தவிர, புலியைக் காணக்கூட முடியவில்லை. அந்நிலங்களின் அருகிலேயே சிவாலயமும் இருப்பதால், ஒரு கூட்டம் சிவாலயத்திலும் உட்புகுந்து தேடினர்.
அந்தப் பெரிய பள்ளத்தின் நீட்சிக்குள் பத்திரமாக அமர்ந்திருந்தது அந்தப் புலி. உள்ளிருந்து கிளம்பியிருந்த மரத்தின் கிளைகள் சுத்தமாக மறைத்திருந்தன. வெளியில் இருநது காணும் எவருக்குமே பள்ளமிருப்பது தெரியுமே தவிர, உள்புறமாக அதன் நீட்சி தெரிய வாய்ப்பே இன்றிப் போனது.
எதுவும் கிடைக்கவில்லை என திரும்பி வந்த இளைஞர் கூட்டம் கூற, புலி காட்டுக்குள் திரும்ப ஓடிவிட்டிருக்கலாம் என ஊர் முடிவு செய்தது. அது எவ்வளவு பெரிய தவறென்று, பத்து நாட்கள் கழித்து, சிவாலயத்து அந்தணரையே புலி அடித்துக் கொன்றபின்தான், விஷயத்தின் தீவிரம் புரிய ஆரம்பித்தது.
எவ்வளவு தேடியும், எத்தனைமுறை அலைந்தும் அந்தப் புலி கண்ணில் படாததால், ஊர்த்தலைவர் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்க ஆரம்பித்தார். கோவிலை சுற்றியுள்ள இறையிலி நிலங்களில் வேலை செய்யவே எவரும் பயந்தனர். கோவிலுக்கு மக்கள் வரத்து குறைய ஆரம்பித்தது. மற்ற நிலங்களில், அடுத்த விளைச்சலுக்கான வேலைகள் ஆரம்பித்திருக்க.. கோவில் நிலங்கள் வீணாய்க் கிடந்தன. ஊர்த்தலைவர் #கங்கனார் கவலைப்பட ஆரம்பித்தார்.
இதற்கெதற்கு தந்தையே இத்தனை வேதனை.? இறைவனுக்கு படியளக்க ஊர்மக்கள் நிலம் உள்ளதே.. இந்த ஒருமுறை, அந்தக் கொடிய புலி கிடைக்கும்வரை, கோவில் நிலங்கள் உழப்படாமல்தான் இருக்கட்டுமே.. கேட்டான் அவரின் மகன் #மார்த்தாண்டன்.
அறியாமல் பேசுகிறாய் மகனே.. கோவில் என்பது கற்றளியோ, கட்டிடமோ, சிலைகள் நிறைந்திருக்கும் சிற்பக்கூடமோ அல்ல. ஒட்டுமொத்த சக்தி உறைந்திருக்கும் ஓரிடம். அந்த மாபெரும் சக்திதான் இந்த ஊரைக் காத்து நிற்கிறது. அது இல்லையேல், ஊரே இல்லை.
மன்னாதி மன்னர்கள் எல்லாம் கோவில்களுக்கு நிலங்களை நிவந்தமாகத் தருவதன் காரணமே அதுதான். எந்த ஒரு ஊரின் கோவில் நிலங்களும், அதன்மூலம் கோவில்களும் முறையாகப் பராமரிக்கப்பட்டு, இறைக்கு வேளை தவறாமல் படைக்கப் படுகிறதோ.. அந்த ஊரின் நலனை இறை பார்த்துக் கொள்ளும். இப்படி ஊரின் நலனை இறை காக்க, அதை முறையாக நிர்வகிப்பது மட்டுமே மன்னரின் வேலை.
கோவில் என்பது பலர் கூடும் இடம். ஒரு ஊரின் நல்லது, கெட்டது எனப் பலவற்றையும் விவாதிக்கும் இடம். இறையின் முன்னிலையில், எவராலும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேச இயலாது என்பதாலேயே, ஊரின் பல முக்கிய முடிவுகள் கோவில் வளாகத்தில், இறைசாட்சியாகவே எடுக்கப் படுகின்றன.
புலியின் பயத்தால், மக்கள் செல்லாமல், வழிபாடின்றி இறை இருக்குமேயானால், கோவில் பாழடைந்து போகும். ஊரின் எல்லைதாண்டி நிற்கும் துர்சக்திகள் எளிதாக உள்நுழையும். பல கேடுகளை விளைவிக்கும். இந்த நிலத்தில் விளைத்த நெல்லைத்தான் இறைவனுக்கு அமுது படைக்கப்பட வேண்டும் என்பது நியதி. இதை மாற்றவும் இயலாது. இறை பட்டினியாய் இருக்க, ஊர்மக்கள் உணவாடவோ.. உறவாடவோ.. இயலாது.
அதுமட்டுமின்றி, இந்தமுறை விளைவிக்காமல் விட்டுவிட்டால், நிலங்களில் முட்களும், புதர்களும் பெருகி, நாளை பயிரிட முடியாத நிலைக்குப் போய்விடும். பெற்ற தாயடா நம் நிலம். அதை விளைவிக்காமல் வாடவிடுவது பெரும்பாவம். அதிலும் இது இறைவனுக்கான நிலம். இதைப் பயிரிட மறுத்தால், பெருங்கேடுகள் விளையும். நம்மையே காத்து நிற்கும் இறையின் வீட்டையும், நிலத்தையும், நம்மால் பாதுகாக்க இயலாவிடில், நாம் உயிர்வாழ்ந்தென்ன பயன்.?.. இதில், நான் ஊர்த்தலைவர் என்ற பெரும் பொறுப்பினையும் சுமந்து நிற்கிறேனே..
வேதனையில் விசும்பத் தொடங்கினார் கங்கனார்.
மனம் நெகிழ்ந்தது மார்த்தாண்டனுக்கு. விரைவில் இராஜேந்திரர் படையில் சேரக் காத்திருக்கும் அவனுக்கு, ஊரின் தலையாய பிரச்சினையைத் தீர்ப்பதே தன் கடமை எனப் புரிந்தது. மெல்ல தந்தையின் தோள்தொட்டான்.
கவலை வேண்டாம் தந்தையே.. நானிருக்கிறேன். இறைநிலங்கள் இந்தமுறையும் விளையும். நான் பயிரிடுவேன். புலிக்குப் பயந்து கடமை தவறக்கூடாது. வேங்கை ஆளும் சோழநாட்டில், ஒரு புலியால், இறைப்பணி தடைபெறுவதா ? விடமாட்டேன். நல்லநாள் பாருங்கள். உழவுப்பணி அங்கு தொடர்கிறேன்..
உறுதியாகக் கூறிய மகனைக் கட்டியணைத்தார் கங்கனார்.
சோழீஸ்வரர் காற்றாய் வீசி, அவன் சிரம் தொட்டு ஆசிர்வதித்தார்.
--------------------------------------------------------------------------------
#ஆடவர்சாமி : 3
அன்றைய விடியலை ஆவலோடு எதிர்நோக்கி இருந்தான் மார்த்தாண்டன். இறைநிலத்தில் இன்று ஏர்ப்பணி துவங்கவேண்டிய நாள். கங்கனாரோ எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டிருந்தார்.
நேற்று ஊர்ச்சபையில் இதுபற்றிப் பேசியபோது பலரும் தடுத்தனர்.
வேண்டாம் கங்கனாரே.. தங்களுடைய வாரிசைத் தனியே களத்தில் இறக்குவது முறையல்ல. அந்தப் புலி எங்கிருந்து எப்போது வருகிறதென்றே தெரியவில்லை. வேறு எவருமே உடன்வர பயப்படும் நிலையில், தங்கள் மகன் மட்டும் பிடிவாதமாக இச்செயலில் இறங்குவது சரியல்ல. அதுவும், உடையார் இராஜேந்திரரின் படையில் சேரக் காத்திருக்கும் வீரன் அவன். நாட்டுப் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவனை, இந்தப் புலிக்கு பலியிடப் போகிறீர்களா.. என்ன ?.. பலவாறு பேசி கங்கனாரை மாற்ற நினைத்தனர்.
நான் பிறந்த இம்மண்ணின் துயர் தீர்க்காது நாட்டுப்பணி முக்கியமென்று செல்வது தவறு. எம் ஊர் அமைதியாக இருந்தால் மட்டுமே, நான் சிறப்பாக என் பணி செய்ய இயலும். வேங்கையின் படையில் பணியாற்றப்போகும் நான், ஒரு புலியின் அட்டகாசத்தை அடக்காமல் விலகுவதா.? அதையும் தாண்டி, எக்காரணம் கொண்டும் இறைநிலம் விளையாமல் இருப்பதோ, உழவுப்பணி தொடங்காமல் இருப்பதோ நல்லதல்ல. நான் என் ஊர் நலமாயிருக்க, அதைக் காக்கும் எம் இறைக்கு தவறாமல் அமுதுபடைக்க, இதில் இறங்குகிறேன். புலி என்பது அடுத்த பிரச்சினை. அதை இறை பார்த்துக் கொள்ளும்..
கேட்டவர்களும், தடுத்தவர்களும் வாயடைக்கும்படி பதில் கூறினான் மார்த்தாண்டன்.
அப்படியெனில், இதுபற்றி மாமன்னருக்கு தெரிவிக்கப்படவேண்டும். அவர் அனுமதி கொடுத்தபிறகே, இப்பணியில் உன்னை அனுமதிப்போம்.. என்றது ஊர்ச்சபை.
மன்னருக்குத் தெரிவிப்பது உங்கள் கடமை. ஆனால், என்னைத் தடுக்க இங்கு எவருக்குமே உரிமை இல்லை. எம் தந்தையாரும் இதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, வேறு எவர் அனுமதியும் தேவையில்லை. இறைப்பணி எக்காரணம் கொண்டும் தடுக்கப்படக்கூடாது என்பது இன்றைய மாமன்னரின் தந்தையான பேரரசர் உடையார் இராஜராஜரின் கட்டளை. அதற்கான உரிமையும் எம் குடும்பத்திற்கு உண்டு என்பதை சபை நினைவில் கொள்ளட்டும்.. என்றான் மார்த்தாண்டன்.
ஆம்.. பேரரசர் இராஜராஜரின் கட்டளை ஒரு #குறுவாள் ரூபத்தில் கங்கனாரின் குடும்பத்தில் உள்ளது உண்மைதான். இங்கே பேசும் மார்த்தாண்டனின் பாட்டன்.. கங்கனாரின் தந்தையான #ஆடவர்சாமிக்கு பேரரசர் இராஜராஜர் தந்த குறுவாள் அது.. என்றார் ஊர்ச்சபையைச் சார்ந்த முதியவர் ஒருவர்.
அந்த குறுவாள் வரலாற்றினை நாங்களும் அறியலாமா ?.. கேட்டான் ஒரு இளைஞன்.
அறியவேண்டிய விஷயம்தான் அது. பேரரசர் இராஜராஜர் காலத்தில், பெருவுடையார் கோவில் பணிகள் நடந்து கொண்டிருந்த நேரம் அது. சோழமண்டலத்தின் எல்லா ஊர்களில் இருந்தும் விளையும் நெல், காய்கறிகள், கனிவகைகள் என ஓர் பகுதி தஞ்சைக்கு அனுப்பிக் கொண்டிருந்த காலம் அது. அதை பத்திரமாக நம் ஊரில் இருந்து எடுத்துச் சென்று தஞ்சையில் மூவேந்த வேளாளரிடம் ஒப்படைக்கும் பணி இந்த மார்த்தாண்டனின் பாட்டன் ஆடவர்சாமிக்கு வழங்கப் பட்டிருந்தது. கங்கனாரே அப்போது இளைஞன்தான்.
ஒருதடவை அவ்வாறு எடுத்துச் செல்லும்போது எவரென்றே தெரியாத பத்துபேர் கொண்ட கூட்டம், கொண்டு சென்ற பொருட்களை வழிப்பறி செய்ய நினைத்து தாக்க ஆரம்பித்தது. ஆடவர்சாமியுடன் சென்ற நான்கு வீரர்களும் போரிட்டு அறுவரை சாய்த்து, தாமும் உயிரிழந்தனர். மீதி இருந்த நான்கு பேரில் ஒருவன் தப்பித்துவிட, மீதி மூன்றுபேரை தன் கையில் இருந்த ஒற்றைக் கம்பின் துணைகொண்டே சண்டையிட்டு அடித்தே கொன்றுவிட்டார் ஆடவர்சாமி.
இத்தகவல் பேரரசர் இராஜராஜருக்கு சொல்லப்பட, பெருவுடையார் கோவில் வாசலிலேயே சந்தித்திருக்கிறார் இவரை. நடந்ததைக் கேட்டவுடன் ஆவேசப்பட்டு,
இறைப்பணிக்கு வந்த பொருளை தடைசெய்ய வந்தவர்களைக் கொல்லாமல் விட்டாயா.?.. என அவர் கேட்க,
ஒருவன் மட்டும் வாளால் என் காலில் வெட்டிவிட்டு தப்பிவிட்டான். மீதிப் பேரை என் கைகளாலேயே அடித்துக் கொன்றேன்.. என ஆடவர்சாமி பதில் சொல்ல..
ஓடியவனை கத்தியெறிந்து கொல்லவேண்டியதுதானே.?.. என அவர் கேட்க..
என்னிடம் கோல் தவிர குறுவாள் ஏதுமில்லை அரசே.. என இவர் சொல்ல..
இதோ.. பிடி இந்தக் குறுவாளை.. இறைப்பணி எங்கு எவரால் தடுக்கப்படினும் இதைப் பயன்படுத்த உனக்கு உரிமை தந்தேன்.. என்றாராம் பேரரசர்.
அன்றிலிருந்து அந்தக் குறுவாளை விட்டு ஆடவர்சாமி நீங்கியதே இல்லை. அது மன்னரின் மாண்பாக, இவ்வூருக்கு கிடைத்த பெருமையாக, ஆடவர்சாமியின் குடும்பத்தினராலேயே பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதன் கைப்பிடியில், இராஜராஜர் என வடிக்கப் பட்டிருக்கும்...
என்று பெருமையாகவும், கம்பீரத்துடனும் கூறினார் அந்த முதியவர்.
ஓ.. அதனால்தான் இறைப்பணி செய்வதை தடுக்க எவருக்கும் உரிமையில்லை என மார்த்தாண்டன் சொல்கிறானா.. நல்லது.. நாங்கள் அந்தக் குறுவாளைப் பார்க்க முடியுமா ?.. கேட்டான் இன்னோர் இளைஞன்.
அதை எடுத்துக்கொண்டுதான் ஏர்ப்பணிக்கு மார்த்தாண்டன் செல்வான். வேண்டும் எனில் உடன் சென்று பாருங்கள்.. என்றார் கங்கனார்.
உடன்செல்ல எவரும் முன்வரவில்லை என்பது வேதனையைத் தந்தது கங்கனாருக்கு. ஊர்ச்சபையோ, அனுமதி தர மறுத்தது. ஊர்தாதலைவராகவே கங்கனார் இருந்தாலும், இவ்விஷயம் தன் மகன் சம்மந்தப்பட்டது என்பதால், ஒதுங்கியே இருந்தார்.
ஊர்ச்சபையில் இருந்து இராஜேந்திரருக்கு ஓலைமூலம் இதுபற்றித் தகவல் அனுப்பப்பட்டது.
எவர் தடுப்பினும், எது நடப்பினும் நாளை நான் ஏர்ப்பணிக்குச் செல்வது உறுதி.. என தன் முடிவைத் தெரிவித்து நகர்ந்தான் மார்த்தாண்டன்.
அப்படியெனில், உன் விஷயத்தில் எது நடப்பினும், ஊர்ச்சபை பொறுப்பேற்காது.. என அவனை விடுவித்தது ஊர்ச்சபை.
இதோ.. இடையில் இராஜராஜர் அளித்த குறுவாளுடன், தோளில் ஏர்க்கலப்பையுடன், தன் இரு காளைகளோடும், நெஞ்சில் இராஜேந்திரரின் வீரத்தையும் சுமந்துகொண்டு, ஒற்றை ஆளாய், இறைநிலம் விளைவிக்க கிளம்பிவிட்டான் சோழவேங்கை கங்க மார்த்தாண்டன்.
பள்ளத்தின் உள்பகுதியில் பதுங்கியிருந்த அந்தப் புலிக்கு, பசியெடுக்க ஆரம்பிக்க, நேற்றிலிருந்து இரை கிடைக்காத வெறியில், மெல்ல வெளிவந்து சுற்றும் நோக்கியது அது.
சில நாழிகைகள் தேடலுக்குப் பின் அதன் பார்வையில் பட்டன இரண்டு காளைகள்.. கூடவே அவைகளை வைத்து உழுது கொண்டிருந்த மார்த்தாண்டனும்.
ஆளரவம் வேறேதுமில்லை என்பதை உறுதிசெய்து கொண்டு, அந்தப் புலி மெல்ல முன்னேறியது அவனை நோக்கி
--------------------------------------------------------------------------------
#ஆடவர்சாமி : 4
மார்த்தாண்டனை நோக்கி அந்தக் கொடும் புலி நெருங்கிக் கொண்டிருந்த அதே நேரம்...
மாமன்னர் உடையார் ஸ்ரீ இராஜேந்திர சோழரிடம் ஊர்ச்சபை அனுப்பிய ஓலை சென்றடைந்தது. முழு விவரத்தினையும் கேட்டறிந்த இராஜேந்திரர், ஒரு கணம் கண்மூடி யோசித்தார். தனது ஓலைநாயகத்தை வரச் சொன்னார்.
இந்த நாழிகையில் இருந்து கங்க மார்த்தாண்டன் எனது தனிப்படையின் வாள்வீரனாக சேர்க்கப்பட்டிருக்கிறான் என உடன் ஓலை அனுப்புங்கள். என்னிடமிருந்து வரும் அடுத்த கட்டளைக்கு காத்திருந்தால் போதும் என்பதையும் குறிப்பிடுங்கள். இந்த ஓலையை, நமது புரவி வீரனிடம் கொடுத்து உடன் அவனிடம் சேர்க்கச் சொல்லுங்கள்.. எனக் கட்டளையிட்டார்.
ஓலை தயாரானது. மாமன்னரின் இலச்சினையோடு அது குயிநாடு நோக்கிப் புறப்பட்டது.
முகத்தில் கேள்விக்குறியோடு நின்றிருந்த ஓலைநாயகத்தைப் பார்த்த இராஜேந்திரர்..
என்ன இது ? புலியால் பலியாகிவிடாமல் தடுப்பதை விட்டு படையில் சேர்க்கிறானே என யோசிக்கிறீர்களா நாயகத்தாரே ?.. என்ற கேள்விக்கு மெல்ல தலையசைத்தார் ஓலைநாயகம்.
எம் தந்தை பேரரசர் இராஜராஜரின் கட்டளையை வைத்து என்னை செயல்படாமல், அவன் நினைப்பதை செய்து முடிக்க விரும்புகிறான் அல்லவா.. அதைத் தடுக்க இது ஒன்றுதான் வழி.
சோழத்தின் வீரன் இறையின் கட்டளையைக் கூட மீறுவான் தன் நாட்டிற்காக. ஆனால், ஒருபோதும் தம் படைத்தலைவனின் ஆணையை மீறவே மாட்டான். படையில் தன்னை சேர்த்துவிட்டார்கள் என்பதை அறிந்தபின், அவனது ஒவ்வொரு செயலும் தலைவனின் உத்தரவுப்படியே இருக்கும்.
தன் ஊரின் நலனுக்காக தனியொருவனாகப் போராடச் செல்லும் நிச்சயம் அவன் சிறந்த வீரனாகத்தான் இருக்கமுடியும். அப்படிப்பட்டவனை இழந்துவிடக் கூடாதல்லவா.?.. என் ஓலை கண்ட அடுத்த நொடியில் இருந்து, என் அடுத்த உத்தரவிற்காகக் காத்திருப்பான். அதற்குள் நாமும் இப்பிரச்சினையை சரிசெய்து விடலாம்.. என்றார் இராஜேந்திரர்.
ஓலை அவனை அடைவதற்குள், ஏர்ப்பணி செய்து கொண்டிருக்கும் அவனை புலி தாக்கிவிட்டால்.?.. கேட்டார் ஓலை நாயகம்.
அதுதான் என் கவலையும். அப்படி எதுவும் நடந்துவிடக் கூடாது என ஈசனை வேண்டிக் கொள்கிறேன்.. என்றார் இராஜேந்திரர்.
முகம் தெரியாத ஒரு வீரன்.. அதுவும் தங்களின் படைவீரன்.. என்ற எண்ணம்தான் இக்கவலைக்குக் காரணமா.?.. மெல்லக் கேட்டார் ஓலைநாயகம்.
நான் கவலைப்படுவது அந்த வீரனுக்காக அல்ல நாயகத்தாரே..
அவனிடம் மாட்டி உயிர்விடப்போகும் அந்தப் புலிக்காக.
சோழத்தின் வேங்கை ஒரு காட்டுப் புலியை உயிரோடு விடாதே என்ற நம்பிக்கைதான் காரணம்.
கொண்ட கொள்கையில் வென்ற பிறகுதான், சோழவீரனின் உயிர் பிரியும் என்பது தாங்கள் அறியாததா.?.. எனப் புன்னகையோடு கேட்ட இராஜேந்திரரை விழிகள் விரியப் பார்த்தார் ஓலைநாயகம்.
உங்கள் வீரர்கள் மீது அத்துணை உறுதியான நம்பிக்கையா..?. மெல்லக் கேட்டார் ஓலைநாயகம்.
இது சோழத்தின்மீது.. அதன் வீரர்கள் என்மீது கொண்ட நம்பிக்கையினால் வந்த உறுதி... என்பதை உறுதியாகவே சொன்னார் இராஜேந்திரர்.
இன்னொருபுறம்,
இராஜேந்திரரின் ஓலையைக் கொண்டுசென்ற வீரன் குயிநாடு ஊரின் எல்லையில் நுழைந்தான்.
அதே நேரம்,
பசியோடும், வெறியோடும் இருந்த அந்தப் புலி கடும் வேகத்துடன் மார்த்தாண்டனை நோக்கிப் பாய்ந்தது.
தனது காளைகள் மிரள்வதைக் கண்ட மார்த்தாண்டன், பாய்ச்சலாய் சற்று தூரத்தில் புலி விரைவதைக் கண்டவுடன், சட்டென ஏரிலிருந்து இரண்டு காளைகளும் பிரிந்து ஓடாதபடி இறுகக் கட்டிவிட்டு, புலியின் பாதைக்கு இடையில், காளைகளுக்கும் புலிக்கும் நடுவில், நன்கு காலூன்றி நிதானமாய் நின்றான்.
தன்னைக் கண்டவுடன் பயந்து ஓடியவர்களையே இதுவரை பார்த்துப் பழகிய அந்தப் புலி, தனக்கும் தன் இரைக்கும் நடுவில் கம்பீரமாய் நின்றுகொண்டிருக்கும் மார்த்தாண்டனைக் கண்டு சற்று மிரண்டது. பாய்ச்சலின் வேகம் குறைத்து, வேறு எப்பக்கமாவது தனக்கு ஆபத்து உள்ளதா என சுற்றுமுற்றும் நோக்கியது. எவருமில்லை என்றறிந்தபின் மார்த்தாண்டனை நோக்கிப் பாய்ந்தது.
தன்மேல் பாயும் புலியின் முன்னங்கால்களை அழுத்தமாகப் பிடித்து, தன் முழுபலம் கொண்டு வீசியெறிந்தான் மார்த்தாண்டன். இத்தனை அருகாமையில் புலியினைக் கண்டு காளைகள் மிரண்டன. அவைகள் நகர்ந்து ஓடிவிடாமல், இறுகக் கட்டியிருந்தான் மார்த்தாண்டன்.
கீழே விழுந்து எழுந்த புலி வெறி கொண்டு மீண்டும் பாய்ந்தது. அதனுடைய பாய்ச்சலின் திசையறிந்து சட்டென இடப்புறம் விலகி, அதன் பின்னங்காலினில் ஓங்கி அடித்தான் மார்த்தாண்டன். வலிதாளாத புலி ஆவேசமானது. அவனைச் சுற்றி சுற்றி ஓடியது. அவனை சுழல வைத்தது. திடீரெனப் பாய்ந்து அவன் முகத்தில் அறைந்தது.
புலியின் அறையால், தடுமாறிய மார்த்தாண்டன் நிலைகுலைந்து
தரையில் விழுந்தான். உருண்டான். இடையில் செருகியிருந்த இராஜராஜரின் குறுவாள், அவன் உருண்ட பொழுதில் தரையில் விழுந்தது.
எதிரே வெறியோடு புலி..
நடுவே இராஜராஜர் அளித்த குறுவாள். பாயலாமா என புலி யோசிக்கும்முன், கரணம் அடித்து முன் இருந்த குறுவாளைக் கையிலெடுத்தான் வீரன். அவன் குனிந்து அதை எடுக்கும் நேரம், பாய்ந்து வந்த புலி சரியாக அவனது கழுத்தினைக் குறிவைத்து தனது கூரிய நகங்களால் பலமாகத் தாக்க, கழுத்தின் இரத்தநாளங்கள் அறுந்து, மார்த்தாண்டனின் கழுத்தில் இருந்து வடிந்த இரத்தம் தோள், கை எனப் பரவி உடல் நனைத்தது.
கையில் அந்தக் குறுவாளோடு எழுந்து நின்ற மார்த்தாண்டன் தனை மறந்தான். புலிக்கு நிகரான வெறிகொண்டான். எதிரே பாயக் காத்திருக்கும் புலிமேல், இவனே பாய்ந்தான். அதன் கழுத்தினை ஒரு கையால் இறுகப் பற்றி, மற்றொரு கையால் குறுவாளை அதன் தொண்டைப் பகுதியில் செலுத்தினான். அதே வேகத்தில் குறுவாளை வெளியில் எடுத்து, புலியை சுழற்றி எறிந்தான்.
காயப்பட்ட புலி வெகுண்டெழுந்தது. இருவரின் உடலையும் குருதி வழிந்து நனைத்துக் கொண்டிருந்தது. தன் மொத்த பலத்தையும் சேர்த்து புலி அவன்மீது பாய, பாயும் புலி தன்னைத் தொடுமுன் அதன் ஒருகால் பிடித்துத் தூக்கி, தன் குறுவாளை சரியாக அதன் நெஞ்சில் செலுத்தி கிழிக்க,
தன் கூரிய பற்களால் மார்த்தாண்டனின் கழுத்தினைக் குதறியது அந்தப்புலி.
இருவரும் தான் பிடித்த பிடியினை விடாது மண்ணில் விழுந்து கிடக்க, ஊர்ச்சபையினரோடு அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தான் அவ்வீரன். இராஜேந்திரர் அளித்த ஓலை அவனது கையில்.
--------------------------------------------------------------------------------
#ஆடவர்சாமி : 5
எந்த அசைவுமின்றி விழுந்துகிடந்த மார்த்தாண்டனையும், புலியையும் நோக்கி ஊராரும், ஓலை கொண்டுவந்த வீரனும் ஓடிவந்தனர். அந்த வீரன் மட்டும் முதலில் நெருங்கி புலி இறந்துவிட்டதை உறுதி செய்தான். மெல்ல மார்த்தாண்டனைப் புரட்டினான். புலியால் கடித்துக் குதறப்பட்ட கழுத்தில் இருந்து குருதி சோழமண்ணின் தாகம் தணித்துக் கொண்டிருந்தது. புரட்டியதால் எங்கோ உண்டான வலியில் மார்த்தாண்டன் முனக..
உயிர் இருக்கிறது.. உயிர் இருக்கிறது.. வைத்தியரை அழையுங்கள்.. என அலறினான். விவரமறிந்து ஓடிவந்த கங்கனார் தன் மகனின் தலையை மடியில் ஏந்தியவாறு உணர்வேதும் இன்றி அமர்ந்திருந்தார். கண்களின் கண்ணீர் மகனின் முகம் நனைத்தது. மெல்லக் கண் திறந்தான் மார்த்தாண்டன்.
புலி இறந்துவிட்டதா தந்தையே.? முதல் கேள்வியே இதுதான்.
ஆம்.. புலியை வென்றுவிட்டீர் மார்த்தாண்டரே தங்கள் வீரத்தால்.. ஓலை கொணர்ந்த வீரனின் குரல் கேட்டு தலை திருப்பினான் மார்த்தாண்டன்.
அவர் யாரென்ற அறிமுகமும், அவர் வந்த நோக்கமும் உரைக்கப்பட, மெல்ல புன்முறுவல் பூத்தான்.
தந்தையே.. இந்நாள் ஒரு பொன்னாள் நமக்கு. இனி கோவில் நிலத்தினில் ஏர்ப்பணியும், விளைச்சலும் தங்குதடையின்றி நடக்கும். அதேபோல், நான் வெகுநாளாய் ஏங்கிக் காத்திருந்த மாமன்னரின் படையிலேயே பணியும் கிடைத்திருக்கிறது.. என்றான் வலியோடு.
ஆம் மகனே.. எனக் குமுறி அழுதபடியே கூறினார் கங்கனார்.
ஆனால் வீரரே, மாமன்னரிடம் என்னை மன்னிக்கச் சொல்லுங்கள். என்னால் தற்போது இதை ஏற்க இயலாது போனது எனது விதி.
எனது ஆயுள் இன்னும் சில நாழிகைகளே என்பதை நான் உணர்கிறேன். எம் மாமன்னரின் படையில் சேர்ந்த பிறகு, அவர் உத்தரவின்றி என் உயிர் பிரிவதுகூட, தலைவனின் கட்டளையை மீறியது போலத்தான். அதனாலேயே, மறுக்கிறேன்.
எம் நண்பரே.. வீரரே.. மாமன்னரிடம் சொல்லுங்கள். மீண்டும் சோழத்தில் பிறப்பேன். இந்த மண்ணோடு வளர்வேன். சோழர் படைவீரனாக என் நாட்டிற்கு சேவை செய்யாமல், என் மொத்தப் பிறப்பும் முடிந்துவிடாது. அப்போது தவறாமல் மன்னரின் ஆணையைப் பெற்றுக் கொள்கிறேன் என அவர் தாழ்பணிந்து கூறியதாகக் கூறிவிடுங்கள்.. என்ற மார்த்தாண்டனின் சொல கேட்டு அந்த வீரனின் கண்களும், இதயமும் கலங்க ஆரம்பித்தன.
என்னைப் பெற்றெடுத்த தந்தைக்கும், வளர்த்துவிட்ட இந்த ஊர்மக்களுக்கும், உணர்வளித்த இந்த சோழ மண்ணிற்கும் என் இறுதி வணக்கம்.
மூச்சு வாங்க ஆரம்பித்தது அவனுக்கு. மார்புக்கூடு ஏறி இறங்கியது. தன் கைகள் இரண்டையும் குவித்தான். நெஞ்சுக்கு நேர் வைத்து வணங்கினான். தன் கடைசி மூச்சினை, சோழத்தின் காற்றினை நீண்ட சுவாசமாய் உள்வாங்கினான். மெல்ல அடங்கினான் புன்னகையோடு. அவனது உயிர் பிரிந்து சோழத்தின் காற்றோடு கலந்து போனது.
அந்த மண்ணின் மகனுக்காக மொத்த ஊரும் கதறியது. அவனது வீரத்தையும், தியாகத்தையும் பெருமைப்படுத்த, அவன் புலியைக் கொன்ற இடத்திலேயே கல்வெட்டுடன் கூடிய சிற்பத்துடன் நடுகல் அமைத்து சிறப்பித்து வணங்கியது.
மாமன்னர் இராஜேந்திரருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டவுடன், தன் பிரம்மராயரோடு நேரிலேயே அவ்வூருக்கு விரைந்தார். அந்த வீரனுக்காக வைக்கப்பட்ட நடுகல்லினைக் கண்டார். ஊராரை அழைத்தார்.
என்ன இது ?. இது ஒரு சோழவீரனின் வீரத்திற்கும், பிறந்த ஊருக்காக அவன் செய்த தியாகத்திற்குமான அடையாளத்தில், தேவையே இன்றி எனது மெய்க்கீர்த்தியையும், வீரத்தையும் புகழ்ந்திருக்கிறீர்கள். அவன் யாரென்ற தகவலும் அதிகம் இல்லை. அவனது உருவமும் தெளிவில்லை. உடனே இதை மாற்றி அமையுங்கள்.
என்னுடைய ஆட்சியாண்டு, என் காலம் என்பது மட்டுமே போதும். மீதி அனைத்து விவரங்களும் அந்த வீரனைப் பற்றியே இருக்கவேண்டும். யார் அவன்.. எவர் மகன்.. எதற்காகப் புலியோடு போரிட்டான்.. செய்த தியாகம் என்ன.. இவைகளே இந்தக் கல்வெட்டில் இருக்கவேண்டும்.
புலியோடு அவன் மோதும் சிற்பமும், இன்னும் வீரமாகவும், தெளிவாகவும், உயிர்ப்போடும் இருக்கட்டும்..
கட்டளையிட்டார் இராஜேந்திரர்.
எம் ஈசனே.. இதுபோன்ற வீரர்களின் தியாகமே சோழத்தை காலம் கடந்தும் நிலைநிறுத்துகிறதே தவிர, வேறெதுவுமில்லை.. மனதிற்குள் உரைத்தபடியே திரும்பினார் மாமன்னர்.
அவரது கட்டளைப்படியே அமைக்கப்பட்டு, அவர் தொட்டுத் தடவி உணர்ந்த அந்த சிற்பத்தின் படத்தைத்தான் கீழே நீங்கள் பார்ப்பது.
சென்ற வாரம் இதைக் கண்டறிந்ததாக நண்பர்#அறம்_கிருஷ்ணன் அவர்கள் பதிவிட்டபோது, என் மனதில் தோன்றிய உணர்வுகளை பதிவுகளாக இட்டேன்.
பிழையேதும் எனில்..
பொறுத்தருள்க.
#உளிமகிழ்ராஜ்கமல் ..
----------------------------------------------------------------------------
தொகுப்பு-#ப்யாரீப்ரியன்..
படங்கள்-அறம் வரலாற்று ஆய்வு மையம் ..

கோழி முட்டையிலுள்ள குஞ்சு சுவாசிப்பது எப்படி?

கோழி எப்படி சுவாசிக்கிறது? இது என்னடா கேள்வி என்று யோசிக்கின்றீர்களா? சரி இருக்கட்டும், கோழி எப்படி சுவாசிக்கின்றது என்று எல்லோருக்குமே தெரியும், ஆனால் இதுவே கோழிக் குஞ்சு எப்படி சுவாசிக்கின்றது? இல்லை இல்லை, நான் கோழிக் குஞ்சு என்று சொல்வது எதைத் தெரியுமா? கோழி இட்ட ஒரு முட்டைக்குள் இருக்கும் குஞ்சு எப்படி சுவாசிக்கின்றது? இதைப் பற்றி எப்போதாவது சிந்தித்துப் பார்த்து இருக்கின்றீர்களா? இல்லையா? அப்படியென்றால் கண்டிப்பாகத் தொடர்ந்து படியுங்கள்!
முட்டைக்குள் இருக்கும் கோழிக் குஞ்சு எப்படி சுவாசிக்கின்றது என்கிற கேள்வியைப் பற்றி நீங்கள் இன்று வரை சிந்திக்கவில்லை என்றாலும், இப்போது நான் உங்களிடம் கேள்வி கேட்டதும், நீங்கள் நிச்சயமாக இந்தக் கேள்வியைப் பற்றி சிந்திப்பீர்கள், ஏனென்றால் ஒரு கோழிக்குஞ்சுக்கு முட்டையை விட்டு வெளியே வந்த பின் தான் பிராணவாயு, அதாவது oxygen தேவைப் படுவது என்று இல்லை. முட்டைக்குள் இருக்கும் போதும் அதற்குப் பிராணவாயு மிகவும் முக்கியம் தான். எனவே, முழுதாக மூடியிருக்கும் முட்டைக்குள் ஒரு கோழிக்குஞ்சு எவ்வாறு சுவாசிக்கின்றது என்பதைப் பார்ப்போம்.
ஒரு கோழிமுட்டையை எடுத்து, அதை உள்ளிருந்து பார்க்கும் போது, அதில் ஒன்றிற்கு மேல் ஒன்றாக இருக்கும் புறமென்றோல், உள்மென்றோல் என்று அழைக்கப்படும் இரு மெல்லிய தோல்களை அவதானிக்கலாம். பொதுவாக ஒரு கோழி முட்டை இட்டதும், ஆரம்பத்தில் அந்த முட்டை வெப்பமாக இருக்கும். ஆனால், நேரம் போகப் போக அந்த முட்டை குளிர்ச்சி அடைந்து சற்று சிறிதாகி விடும்போது, உள்ளே காணப்படும் அந்த இரு தோல்களுக்கும் இடையே பிராணவாயு சேர்கின்றது. இவ்வாறு ஏற்படும் அந்த இடத்தை வளி அறை என்று கூறுவார்கள். எனவே, முட்டைக்குள் வளரும் கோழிக்குஞ்சு அந்த வளி அறையில் சேர்ந்திருக்கும் பிராணவாயுவை சுவாசிக்கின்றது. இப்படி சுவாசிக்கும் கோழிக்குஞ்சு உடனடியாக கரியமிலவாயுவைத் (carbon dioxide) தானே வெளியிடும். இப்படி வெளியிடப்படும் இந்த நச்சு வாயு எங்கே போகும்? இது வெளியே போகாமல் விட்டால், இதை சுவாசித்து அந்தக் கோழிக் குஞ்சு இறந்துவிடுமே, இறைவனால்படைக்கப்படும் அனைத்துமே அதிசயம் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம் என்பது இதில் தெரிந்துவிடும். பிராணவாயு வருவதற்கு ஒரு வழி இருக்கின்றது என்றால், கரியமிலவாயு வெளியே செல்வதற்கும் ஒரு வழி இருக்கத் தானே வேண்டும். நிச்சயமாக! அந்த கோழிக்குஞ்சு வெளியேற்றிய அந்தக் கரியமிலவாயு, முட்டைக் கோதில் காணப்படும் சுமார் 7000 நுண்துளைகள் ஊடாக வெளியே செல்கிறது. அதே நுண் துளைகள் ஊடாக மறுபடியும் புதிய பிராணவாயு உள்வருகின்றது. இப்படியே அந்தக் கோழிக்குஞ்சு ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுவாசித்து வளர்ந்து வரும். என்ன நண்பர்களே, இதை விட ஆச்சரியம் இருக்க முடியுமா? ..#ப்யாரீப்ரியன்


புராணக்காலத்தில் அணு ஆயுதம்?

மகாபாரத காலத்தில் அணுஆயுதம் இருந்ததா? 
ஜெர்மானியர் இந்தியாவில் இருந்து அக்கால நுட்பத்தை திருடினார்களா? என சிலர் கலாய்த்து கொண்டிருக்கின்றனர்

உண்மை என்ன?
ஜெர்மானியர்கள் 1800க்கு பின் இந்தியாவில் சுற்றியது ஒன்றும் ரகசியமல்ல, பிரிட்டனும் பிரான்சும் ஆளும் வர்க்கம் என இந்தியாவின் தங்கத்தை சுரண்டியபொழுது ஜெர்மானியர் இந்திய அறிவு திருட்டில் ஈடுபட்டனர்
அதுவும் தென்னகத்தில் பெரும் ஆராய்ச்சி செய்தனர்

தஞ்சை சரஸ்வதி மஹாலில் ஓலை சுவடிகளில் பெரும்பாலானவற்றை மொழிபெயர்த்தனர், அவ்வளவு ஏன் பாழடைந்து கிடந்த தஞ்சை கோவிலையே அவர்கள்தான் படித்து, கல்வெட்டினை படித்து அதனை கட்டியது ராஜராஜன் என சொன்னார்கள், தஞ்சை கோவிலில் ஜெர்மானியர் ஆராய்ச்சி ஏராளம்

தமிழன் அன்று அதனை கண்டுகொள்ளவே இல்லை, அது ஒரு சபிக்கபட்ட இடம்போல புறம் தள்ளபட்டிருந்தது, நாம் அதன் சிறப்பினை கொண்டாட ஆரம்பித்தது எல்லாம் ஜெர்மானியன் சொன்ன பிறகுதான், அதன் அதிசயத்தை அவனே நமக்கு விளக்கினான்

மண்ணையும் விடவில்லை, தோண்டினார்கள் ஆதிச்சநல்லூர் அவர்கள் தோண்டி சொன்ன விஷயம், இரும்பினை உருக்கி எக்கு செய்யும் வித்தை ஆதிச்சநல்லூர் மக்களுக்கு தெரிந்திருக்கின்றது, இது 100000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நாகரீகம் என சொன்னது அவர்கள்தான்
தேரிகாட்டு மண்ணை பரிசோதித்து அது தாதுமணல் என அன்றே சொன்னது ஜெர்மானியரே, வைகுண்டராஜன், தயா தேவதாசுக்கு எல்லாம் அவர்களே முன்னோடி, ஆனால் கடத்தவில்லை
இப்படி ஜெர்மானியர் இந்தியாவில் சுற்றி அலைந்து ஜெர்மனுக்கு கொண்டு சென்ற விஷயங்கள் ஏராளம், மருத்துவ விஷயங்களையும் கொண்டு சென்றார்கள்
அவற்றில் சிலவற்றை ஹில்டரும் ஆராய்ச்சிக்கு எடுத்தான்,
இந்திய விமான சாஸ்திரா பாதரசம் கொண்டு பறக்கும் சில விமானங்களையும், காற்றினை எரிசக்தியாக கொண்டு பறக்கும் விமானங்களையும் சொன்னது, அவனின் ஆராய்ச்சியில் அதுவும் ஒன்று
மகாபாரத பிரம்மாஸ்திரம் போன்று ஒரு குண்டு வேண்டும் என அவன் சொன்னதுதான் அணுகுண்டு, அவனும் அணுகுண்டு ஆராய்ச்சியில் இறங்கினான், ஆனால் அமெரிக்கா முந்திகொண்டது
அமெரிக்க முதல் அணுகுண்டு சோதனையின்பொழுது அதன் வெடிப்பினை கண்ட விஞ்ஞானி ஒப்பன் ஹைமர், ஆயிரம் சூரியன் உதித்த்து போன்ற என்ற கீதையின் மேற்கோளை சொன்னது எதனை காட்டுகின்றது? அவர் பாரதம் படித்திருக்கின்றார்,
அணுவெடிப்பில் கிருஷ்ணைன் விஸ்வரூபத்தை கண்டேன் என சொன்னது அந்த ஜெர்மனில் வசித்து பின் அமெரிக்காவிற்கு தப்பிய அந்த ஓப்பன் ஹைமர் எனும் யூத விஞ்ஞானி
அமெரிக்க அணுசக்தி மையத்தின் முகத்தில் இருபப்து நடராஜர் சிலையே, அதாவது அணுவின்றி உலகில்லை, தொடர்ந்த‌ இயக்கமின்றி உலகமில்லை என சொல்லும் தத்துவம்.
பல விஞ்ஞான விஷயங்களை மகாபாரதத்திலிருந்து படித்தார்கள், 

பிரமாஸ்திரம் அணு ஆயுதமாயிற்று, கர்ணனின் நாகஸ்திரத்தில் இருந்து உதித்த ஜெர்மானிய சிந்தனைதான் விஷ வாயு குண்டுகள், அதாவது விஷத்தினை ஆயுதமாக பயன்படுத்தலாம் என சொன்னதும் மகாபாரதம்.
பல விஷயங்களை பாரதபோர் உலகிற்கு சொன்னது, பிரம்மாஸ்திர மந்திரம் கர்ணனுக்கு மறந்தது என்பது இன்றைய நவீன கால வாய்ஸ் பார்வேர்டு போன்றது
இந்தியாவின் இதிகாசங்களிலிருந்தும், சமஸ்கிருத நூல்கள் தமிழ் நூல்களிலிருந்தும் ஜெர்மன் கற்றுகொண்ட விஷயங்கள் உண்டு, பின் அவனிடமிருந்து அமெரிக்காவும், ரஷ்யாவும் பெற்றுகொண்டன‌
அவை எல்லாம் பொய் கட்டுகதை என சொல்லும் பெரியாரின் சீடர்கள் சொல்லட்டும், அவர்கள் விருப்பம்.
 புராணங்களில் சில வியத்தகு அறிவும் புதைந்திருக்கின்றது, திராவிட கொள்கைகளில் சில பெரும் அறிவு விஷயங்களை புறக்கணிப்பது சரி அல்ல
இன்றும் உலகம் என்ன ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது என நினைக்கின்றீர்கள்? பெண்டகனின் பெரும் குழப்பம் மற்றும் எதிர்பார்ப்பும் ஆராய்ச்சியும் என்ன?
பாரதத்தில் பிரமாஸ்திரம் என்பது அணுகுண்டு என்பதில் சந்தேகமில்லை, ஆனால் பாசுபதகனை என ஒரு ஆயுதம் உண்டு

அர்ஜூனன் அதனை பெற்றானே அன்றி, யுத்தத்தில் பயன்படுத்தவில்லை

அது எவ்வகை ஆயுதம்? எப்படியான அழிவினை கொடுக்கும் என்பது யாருக்கும் தெரியாது, ஏன் பகவான் கண்ணனை தவிர அர்ச்சுனணுக்கே தெரியாது,
ஆனால் பிரமாஸ்திரத்தை விட சக்தி மிக்கது
அந்த பாசுபதகனை போன்ற ஒன்றை பெறத்தான் இன்றைய ராணுவ உலகம் சிந்தித்து கொண்டிருக்கின்றது
மகாபராதம் பல பெரும் அறிவான விஷயங்களை சொன்ன இதிகாசம், அதனை தெளிவாக படித்த ஜெர்மானியன் சிலவற்றை சாத்தியபடுத்தினான்
கிண்டல் செய்யும் பெரியாரின் சீடர்கள் அதனை செய்துகொண்டே இருக்கட்டும், அவர்கள் அப்படித்தான்
அணுவிஞ்ஞானி ஒப்பன் ஹைமருக்கும், இந்திய விஞ்ஞானி அப்துல் கலாமிற்கும், இன்றைய பெண்ட்கனின் தலைமை விஞ்ஞானி பாசுபத கனைக்கு ஆராய்ச்சி செய்யும் அந்த விஞ்ஞானிக்கு தெரியாததல்ல