Thursday 5 November 2015

MONUMENTS Poetryinstone

நடுகற்கள் பற்றிய ஆர்வமும் ஆய்வும் இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழைமை கொண்டது. நடுகல் கல்வெட்டுகள் பற்றிய சிறு குறிப்புகள் Epigraphica Indica (1892 முதல்), Anunal Report on South Indian Epigraphy (1887 முதல்) Annual Report of Indian Epigraphy (1946 முதல்) ஆகிய வெளியீடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. வால்ஷ் (1937), வெயிட்ஹெட் (1976), வொஜல் (1931), ஹுல்ட்ஷ் (1934) மற்றும் ஆச்சாரிய (1924) ஆகியோரால் நடுகல் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.*1 இருந்தாலும், முறையான ஆவணப்படுத்தும் சீரிய துவக்கமானது ஆர்.நாகசாமி அவர்கள் தலைமையில், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் 1970-களில், வடஆர்க்காடு மற்றும் இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டம் உட்பட்ட அன்றைய தருமபுரி மாவட்டங்களில் நடத்தப்பட்டதில் உள்ளது. நடுகற்கள் அதிகம் கவனம் பெற்றது, 1975-ல் தமிழகத் தொல்லியல் துறை நடத்திய நடுகல் கருத்தரங்கத்துக்குப் பிறகுதான். இக்காலக்கட்டத்துக்குப் பிறகு ‘தமிழ் வீரயுகம்’ பற்றிய ஆய்வுகளும், சிந்தனையும், சங்க இலக்கியத்தில் நடுகல் காட்சிகள் மீதான மறு ஆய்வுகளும் வலுப்பெற்றன.
நாட்டுப்புற ஆய்வுகள் வளர வளர, நடுகற்கள் கூடுதல் முக்கியத்துவம் உடைய தொல்லியல் சின்னங்களான விளங்கிவருகின்றன. தினம் தினம் புதிய நடுகல் கண்டுபிடிப்புகள் பற்றிய செய்திகள் செய்தித்தாள்கள், இதழ்கள், சமூக ஊடகங்கள் வழியாக வெளிவந்துகொண்டே இருக்கின்றன. முறையான ஆவணப்படுத்துதல் இன்மையால், ஒன்று முன்பே அறியப்பட்டதா அல்லது புதியதான அறிதலா என்ற குழப்பமும், மயக்கமும் எல்லாத் தரப்பிலும் உருவாகி வருகிறது.
நடுகற்களை ஆவணப்படுத்துதல் எப்படி ஒரு கட்டாயத்தை உருவாக்கியுள்ளதோ, அதுபோலவே வகைகளையும் வகைப்பாட்டையும் முறைப்படுத்திக்கொள்வதும் அவசியமாகியுள்ளது. முறைப்படுத்தப்பட்ட வகையும் வகைப்பாடும்தான், ஆவணப்படுத்துதலின் முதல் படியென உணர்த்துகிறது.
நடுகல் சொல்
நேரடிப் பொருளில், நடுகல் என்ற சொல் ‘நடப்பட்ட கல்’ என்று பொருள் தருவது. இலக்கியப் பயன்பாட்டில், அது ‘நினைவுக்கல்’ என்ற பொருளில் பெரும்பான்மையாக ஆளப்படுவது. தொல்லியல் பயன்பாட்டில், அது துவக்கத்தில் வீரக்கல் என்ற பொருளில் ஆநிரைக் கவர்தல் அல்லது மீட்டல் செயலில் மாய்ந்த வீரனுக்கு எடுக்கப்பட்ட கல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு, தற்போது பல்வேறு காரணங்களுக்காக இன்னுயிரை ஈந்த வீரமக்களுக்காக எடுக்கப்பட்ட கல் என்ற பொருளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அதனால், நடுகல் என்பது ‘வீரக்கல்’ என்று பொருள் பட பயன்பாட்டில் வழக்குப்பட்டுள்ளது.
ஆனால், வீரக்கல் என்ற சொல்லுக்கு ‘வீரன் நினைவாக எழுப்பப்பட்ட கல்’ என்ற பொருள் கொள்ளாமல், ‘வீரத்தின் அடையாளமாக அமைக்கப்பட்ட கல்’ என்று பொருள் கொள்ள வேண்டும் என்ற கருத்தும் உண்டு.*2
நினைவுச்சின்ன வகைகளில் ஒன்று நடுகல்
தொல்பொருள்களின் வகைப்பாட்டில், நடுகல் என்பது ‘மூத்தோர் நினைவுச் சின்ன’ வகைகளில் ஒன்று. மூத்தோர் நினைவுச் சின்னங்கள் ‘ஈமச்சின்னங்கள்’ என்றும் குறிக்கப்பெறுகின்றன.
நினைவுச் சின்னங்கள்
சமூகத்தின் முன் எந்த ஒரு செயலையும் நினைவில் இருத்திவைக்க மனிதன் அவ்வப்போது அமைக்கும் சின்னமே நினைவுச் சின்னம் என்று குறிக்கப்படுகிறது. அறுதியிடமுடியாத காலப்பழமை கொண்ட நினைவுச் சின்னங்கள் அமைக்கும் சமூகப் பழக்கம், பிற்காலச் சந்ததியருக்கு இவ்வாறு நிறுவப்படும் சின்னங்கள் குறியீடாக அமைந்துப் பொருள் தந்து வருவதால், அவை தனி அடையாளமாகப் பரிணாமம் பெற்று விளங்குகின்றன.
நினைவுச் சின்னங்களின் வகைகள்
நினைவுச் சின்னங்களை அவை நிறுவப்பட்ட நோக்கம் கொண்டு,
1. மூத்தோர் சின்னங்கள் அல்லது ஈமச் சின்னங்கள்
2. வளமை அல்லது சடங்கு சின்னங்கள்
3. பிறவகைச் சின்னங்கள்
என மூன்று முக்கிய வகைகளாகப் பகுத்துப் பார்க்கலாம்.*3
1. மூத்தோர் சின்னங்கள் அல்லது ஈமச் சின்னங்கள்
இறந்த தம் முன்னோர்களின் நினைவைப் போற்றும் பண்பாட்டின் வெளிப்பாடே மூத்தோர் சின்னங்கள் அல்லது ஈமச் சின்னங்கள் ஆகும். மாந்தரினப் பரிணாம வளர்ச்சியின் பல்வேறு காலநிலைகளில் பல்வேறு வகையான வெளிப்பாட்டை மூத்தோர் சின்னங்கள் அல்லது ஈமச் சின்னங்கள் கொண்டிருந்தமையை அறியமுடிகிறது.
ஈமச் சின்னங்களில் இன்றளவு கிடைக்கப்பெற்ற தொல்பொருள் சான்றுகளைக் கொண்டு, கீழ்கண்ட நான்கு வகைகளாகப் பிரித்து அறிய முடிகிறது. அவை –
1. கற்சின்னங்கள்
2. கட்டடச் சின்னங்கள்
3. நினைவுத் தூண்கள்
4. நடுகற்கள்
வளமை அல்லது சடங்குச் சின்னங்களில் இன்றளவு கிடைக்கப்பெற்ற தொல்பொருள் சான்றுகளைக் கொண்டு கீழ்க்கண்ட மூன்று வகைகளாகப் பிரித்து அறிய முடிகிறது. அவை –
1. சன்னியாசிக் கல் மற்றும் அதன் மாற்று வடிவங்கள்
2. நாகர் கல்
3. புதிர் பாதைகள்.

No comments:

Post a Comment