Friday 29 May 2020

யானையும் யானைப்பாகனும் பழகுதல்

#யானையும்_பாகனும்..
யானையை பழக்கும் போது, பாகனோட சொல் பேச்சு கேட்க, பயங்கரமாக அடிப்பார்கள். அதனால், யானை அந்த காயத்தோட வடுவையும், வலியையும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு இருக்கும். யானைக்கு கோபம் வெளிப்படும் நேரத்தில், தலைமைப்பாகன் யானை பக்கத்தில் இருக்க மாட்டான். காரணம், யானைக்கு தன் பாகன் மேல் இருக்கும் வன்மம் வெளிப்படும் நேரம் அதுதான்.

ஒரு யானையை பழக்கும் போது அந்த யானையை சுற்றி நான்கைந்து கும்கியை நிறுத்துவார்கள்.  ஏழெட்டு பாகன்கள் அந்த யானைக்கு முன்னால் நின்று ஆளுக்கு ஒரு குச்சியை கீழே போடுவார்கள். பக்கத்திலேயே ஒரு கும்கி நிற்கும். அது, எப்படி குச்சியை எடுத்து பாகன் கையில் கொடுக்கணும்னு திரும்ப திரும்ப செய்து காட்டும். அவ்வளவு சுலபத்தில் புது யானை குச்சியை எடுத்துவிடாது. ஆனால் அது எடுக்கின்ற வரை கும்கிகள் விடாது. புது யானையை தந்தங்களால் முட்டி நொறுக்கும். பாகன்கள் ஒன்றரை இஞ்ச் தடிமனில், ஆறடி நீளத்தில், ஒரு வாரம்  விளக்கெண்ணையில் ஊறப் போட்ட தீயில் வாட்டிய, யானைகளுக்காகவே தயார் செய்த காட்டு மூங்கில் பிரம்புகளால அடிப்பார்கள். பிளிரிக்கொண்டு இரண்டு கால்களால் எழுந்து நிற்கும். ஆனால் குச்சியை எடுக்காது. எடுக்கின்ற வரைக்கும் கும்கிகளும், பாகன்களும் விடமாட்டார்கள். கடைசியாக அடி தாங்காமல் குச்சியை எடுத்து  எந்த பாகன் கையில் கொடுக்கிறதோ, அவனைதான் அந்த யானைக்கு பிடித்திருக்குன்னு அர்த்தம். இனி அவனுக்கு மட்டுமே கட்டுப்படும். அவன்தான் வாழ்நாள் முழுவதும் அந்த யானைக்கு தலைமைபாகன். பாகன் தேர்வானவுடன் யானைக்கான பயிற்சி ஆரம்பமாகும்.

அதை பழக்க அடைத்து வைத்து தும்பிக்கையைகூட தூக்க முடியாத அளவுக்கு அடித்து... மூணு நாளைக்கு உணவு கொடுக்க மாட்டார்கள். நான்காவது நாள் தன் பாகனை பார்த்து கெஞ்சும். கொஞ்சம் கரும்பும் வெல்லமும் குடுத்து ருசிகாட்டி, பசியை தூண்டி சொல் பேச்சு கேட்டால்தான்.. கரும்பு வெல்லம் கிடைக்கும் என அதற்கு உணர வைத்து, வழிக்கு கொண்டு வருவார்கள்.  அந்த பாகனை கண்டாலே, யானைக்கு மனசுல ஒருவித கிலி ஏற்படுவது போல பயத்தை ஏற்படுத்துவார்கள்.
என்னதான் பயமும் பாசமும் ஏற்பட்டாலும், அவ்வளவு சீக்கிரம் தன் மேல் யாரையும் ஏற விட்டுவிடாது.

கடைசியாக என்றைக்கு அந்த யானை, பாகனை எந்த எதிர்ப்பும் இல்லாமல் தன் முன்னங்கால்களை மடக்கி கொடுத்து, அதன் வழியா மேலே ஏறி உட்கார அனுமதிக்கின்றதோ... அன்றைக்கு பூஜை போட்டு கும்கிகளின் துணையோடு கரோலை திறப்பார்கள். பாகன் யானை மேல் உட்கார்ந்து தான் கரோலை விட்டு வெளியே வர வேண்டும். அப்போதுதான் அது முழுவதும் பழக்கப் பட்டதற்கான அடையாளம். இதெல்லாம் நடக்க குறைந்தது 48 நாட்களாகும். கோவை மாவட்டத்தில 13 பேரை கொன்ற  'மக்னா' யானை, இன்றைக்கு முதுமலை முகாமில் மூர்த்திங்குற பேர்ல சாதுவா இருக்கு. அந்தளவுக்கு பயிற்சி..

யானைகளில் ஆறு வகை. அதில், தும்பிக்கையை ஒட்டி கீழ் நோக்கி வளரும் தந்தங்களை கொண்ட யானைகளை வளர்க்கவே முடியாது. நம்பக தன்மை இல்லாதது. எப்போதும் வெறியுடனே இருக்கும். எந்த நேரம் ஆளை தாக்குமென அறிய இயலாது.கும்கி படத்தில் வரும் கொம்பன் யானை வகைதான் அது.

 V வடிவில் பால் போன்ற நிறமுடைய தந்தங்கள், தேன் நிறத்தில் மின்னும் கண்கள், எப்போதும் முகத்தில் ப்ரியமான ஒரு சாந்தம், அருமையான கீழ்படிதல், வசீகரிக்கும் அழகு கொண்ட உடலமைப்பு, அடர்ந்த முடி கொண்ட வால், அழகான நகங்கள், மடங்காத காதுகள், ஆள் அமரும்படி படுக்கை போன்ற முதுகமைப்பு, நடக்கும் போது அடி மாற்றி வைக்காமல் சரியான அளவுகளில் காலை முழுவதும் தரையில் ஊன்றி நடத்தல், தன் சுற்றுப் புறத்தை சுத்தமாக பராமரித்தல், அன்புக்காக ஏங்கும்,  மனிதர்களுடன் முக்கியமாக குழந்தை களுடன் நன்கு பழகி, சொல் பேச்சு கேக்கும். இது பட்டத்து யானையோட சாமுத்திரிகா லட்சணம். இது போன்ற குணங்கள், பத்தாயிரத்துல ஒரு யானைக்குதான் அமையும். இதன் உடம்பில் தாமரை பூவின் நறுமணம் வீசும். முழுவதும் இந்த மொத்த குணங்களும் அமையக்கிடைக்கா விட்டாலும், இதில் மூன்றில ஒரு பங்கு குணங்கள் அமையப் பெற்ற யானைகளை தாராளமாக வளர்க்கலாம். மனிதர்களை தாக்காது.
||பாகனின்_அனுபவம்||
#ப்யாரீப்ரியன்..
புலனப்பகிர்வு.

No comments:

Post a Comment