Monday 10 April 2017

கழுவேற்றம்

கழுவேற்றம் என்பது கொடூரமான ஒரு மரணதண்டனையாக முற்காலத்தில் வழங்கப்பட்டு வந்துள்ளது. மரம் அல்லது இரும்பால் செய்யப்பட்ட கூர்முனையுள்ள கழுவில் எண்ணெய் தேய்த்து வழுவழுப்பாக்கி இருப்பர். கழுவேற்ற வேண்டியவர்களை நிர்வாணப்படுத்தி அவர்களின் ஆசனவாயை கழுவில் அமர்த்தி விடுவர். ஆள் நடமாட்டமில்லாத காட்டுப்பகுதிகளில் அமைக்கப்படும் இத்தகைய கழுவில் ஏற்றப்பட்டவர்கள் பல நாட்கள் கதறி துடிதுடித்து உயிர் விடுவர். அவர்களின் உடல் நாய், நரி, கழுகு, பருந்து போன்றவற்றிக்கு உணவாகிவிடும். அரசை எதிர்ப்பவர்கள், திருடர்கள் போன்றவர்களுக்கு இதுபோன்ற தண்டனை வழங்கப்பட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது.
கழுமர வழிபாடு
கழுவேற்றிக் கொல்லப்பட்டவர்களின் உயிர் அந்தக் கழுமரங்களில் உறைந்து தெய்வத்தன்மை அடைவதாக மக்கள் நம்புவதால் இத்தகைய கழுமரங்களை காலங்காலமாக வழிபட்டு வருகிறார்கள். பெரும்பாலும் கழுவேற்றிக் கொல்லப்பட்ட வீரர்களையே மக்கள் வழிபடுகிறார்கள். கழுவேற்றப்பட்டு இறந்தவர்களை அவர்களின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் மட்டுமின்றி, சில இடங்களில் கழுவேறக் காரணமானவர்களின் உறவினர்களும் வணங்குகிறார்கள்.
கழுவேற்றம் நடந்ததன் நினைவாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் கல்லால் செதுக்கப்பட்ட கழுமரங்களை மக்கள் வணங்கி வருகிறார்கள். மரம், இரும்பால் ஆன பழமையான கழுமரங்கள் அழிந்துபோன நிலையில் கல்லால் செதுக்கப்பட்ட கழுமரங்களை புதியதாய் உருவாக்கி வழிபட்டு வருகிறார்கள். இத்தகைய கல் கழுமரங்களின் கீழ் அதில் உயிர் விட்டவர்களின் சிற்பங்களை செதுக்கி வைக்கிறார்கள். சில இடங்களில் கழுமரங்களே கருவறைத் தெய்வமாக உள்ளன. மக்கள் தெய்வங்களாக இவர்கள் வணங்கப்பட்டு வருகிறார்கள். இவ்வகை வழிபாடுகள் இன்னும் உயிர்ப்புடன் உள்ளன.
#ப்யாரீப்ரியன்

No comments:

Post a Comment